.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, November 11, 2009

6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

லண்டன்: வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.
இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட பாவிகளா.. !: கர்கரேவின் புல்லட் புரூப் உடை மாயம்!! Karkare's Bullet Proof Jacket goes missing.


மும்பை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே அந்த சம்பவத்தின்போது அணிந்திருந்த புல்லட் புரூப் உடை காணாமல் போய்விட்டது.

இந்த புல்லட் புரூப் உடை தரமற்றதாக இருந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அது காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில அரசும், காவல்துறையும் மூடி மறைக்க முயன்றதையடுத்து இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தி்ன் கீழ் விளக்கம் கேட்டு மனு செய்துள்ளார் கர்கரேவின் மனைவி கவிதா.

மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே தான் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியவர்.

இந்த வழக்கில் அவர் நடத்திய ஆழமான விசாரணையால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான பெண் துறவி பிரஞ்யா சிங் தாக்கூர், சாமியார் பான்டே, ராணுவ அதிகாரி உள்பட பல இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக அவரை பாஜக, விஎச்பி, சிவசேனா, ஆர்எஸ்எஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார் ஹேமந்த் கர்கரே. தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்த ஆரம்பித்த அடுத்த 15வது நிமிடத்தில் தானே துப்பாக்கியுடன் களமிறங்கியவர் கர்கரே.

தரக் குறைவான புல்லட் புரூப் உடையை முதலில் அணிய மறுத்தவர், பின்னர் ஜூனியர் அதிகாரிகள் நிர்பந்தித்தால் அதை அணிந்து கொண்டு காமா மருத்துவமனையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி முன்னேறினார். ஆனால், மூன்று குண்டுகள் அவரது புல்லட் புரூப் உடையைத் துளைத்ததில் அதே இடத்தில் பலியானார்.

ஆனால், அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது புல்லட் புரூப் இல்லை. அதை யார் கழற்றினார்கள் என்றும் தெரியவில்லை. அவர் அதை அணியவே இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.

ஆனாலும் அவர் அதை அணிந்திருந்த நிலையில் தான் அதை குண்டுகள் துளைத்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த உடைகளை வாங்கிய அதிகாரிகள், இந்த உடைகள் கொள்முதலுக்குக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை உருவானது.

இந் நிலையில் தான் கர்கரே அணிந்திருந்த அந்த புல்லட் புரூப் உடையே காணாமல் போக செய்யப்பட்டுள்ளது.

அந்த உடை எங்கே என்று கேட்டு ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா காவல்துறை அலுவலகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அலைந்தும் விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்தே ஆர்டிஐ சட்டப்படி (தகவல் அறியும் உரிமை சட்டம்) அந்த உடை எங்கே என்று கேட்டு 3 மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு நேற்று முன் தினம் அவருக்கு காவல்துறை தலைமையகத்திடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், அந்த உடையைக் காணவில்லை என்று சர்வசாதாராணமாக பதில் தரப்பட்டுள்ளது.

இத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த கவிதா, தொடர்ந்து கூறுகையில்,

மகாராஷ்டிர காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவிலிருந்து விலகிவிட என் கணவர் திட்டமிட்டிருந்தார். காவல் துறையை விட்டு விலகிவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ விரும்பினார்.

அவருடன் 28 ஆண்டுகள் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தவள் நான். திடீரென ஒருநாள் அவர் இல்லை என்றாகிவிட்டது. அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டாலும் அவரது நினைவு ஒரு கணமும் என்னை விட்டு அகலவில்லை, அகலாது. அவரது மறைவை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி கசாபுக்கு இன்னும் தண்டனை தரப்படவில்லை. நீதிமன்றத்தில் நடக்கும் இழுத்தடிப்புகளைப் பார்த்தால் கோபமாக வருகிறது. சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இன்னும் விசாரணையா.. இந்நேரம தீர்ப்பு வந்திருக்க வேண்டாமா?.

தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்துவதாக தகவல் வந்தவுடன சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் அப்படியே விட்டுவிட்டு கையில் தனது ஷூக்களை எடுத்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்... நான் போன் செய்தபோது.. நன்றாக இருக்கிறேன் என்றார். அது தான் அவரிடம் நான் கேட்ட கடைசி வார்த்தை.

நள்ளிரவில் டிவியில் பார்த்துத் தான் அவர் காயமடைந்ததை அறிந்து அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு ஓடினேன். அங்கு அவரது ஜூனியர்கள் அழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு எல்லாம் புரிந்து போய்விட்டது. அவர் இல்லை என்ற உணர்வு என்னை ஆக்கிரமித்தபோது நான் சுயநினைவை இழந்தது இன்னும் எனக்குள் நிழலாடுகிறது.

அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை, ஜூனியர்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடல், சவால்களை விரும்பும் பர்சனாலிட்டி என்றார் கவிதா.

Tuesday, November 10, 2009

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.


இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும். திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும்.

சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி(வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லாமேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை.

2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லாமேரி தொடர்பு கொண்டால் எதிர்முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது. அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என
கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார்.

கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா-மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார். இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும்-
கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார்.

நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள். பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர்.

ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார். அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது.

நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார்.

எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு. ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது. கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு
அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி.

காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் திருச்சி பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

Sunday, November 8, 2009

ரியாத் மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மக்கள் பணியை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செய்து வரும் அதே வேலையில், கடல்கடந்தும் தமது மனிதநேயப் பணிகளை பரந்து விரிந்து செய்து வருகின்றன. அயல் தேசங்களில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின் காரணமாக தான் பாணியாற்றும் தேசங்களில் இருந்துகொண்டே மனிதநேயப்பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். நமது இரு கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்ததில்லை ஆனால் தனது கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை. தமுமுக தலைமையின் வழிகாட்டுதலில் அயல் நாடுகளிலும் தமுமுகவின் கிளைகள் பரந்து விரிந்து செயல்பட்டு மனிதநேயப் பணிகளில் முத்திரை பதித்து வருகின்றன.
அந்த வகையில் சவூதி அரேபிய – தலைநகர் ரியாத் மத்திய மண்டல த.மு.மு.கவின் பொதுக்குழு கடந்த 06-11-2009 அன்று கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மௌலவி ஜமால் உமரி அவர்கள் கிராஅத் ஓத, மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

முதலாக மண்டல நிர்வாகத்தின் கணக்குகள் வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யவிருப்பதை முன்னிட்டு பொருப்பிலிருந்த மண்டல நிர்வாகிகள் தமது பொருப்புகளிலிருந்து ராஜினாமா செய்து விடுப்புப் பெற்றனர்.


உணவு இடைவேளைக்குப் பின், கிழக்கு மண்டலத்திலிருந்து பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் தேர்தல் அதிகாரிகளாக வருகை தந்திருந்த மவுலவி அலாவுதீன் பாகவி, சகோதரர் அப்துல் காதர், சகோ இஸ்மாயில், சகோ நூருதீன் ஆகியோரின் முன்னிலையில் மத்திய மண்டல த.மு.மு.கவிற்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் மத்திய மண்டல நிர்வாகிகளை தேர்தல் முறையில் தேர்வு செய்தார்கள். அதில் மண்டலத் தலைவராக மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனுரைச் சேர்ந்த மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்கள் மண்டலத் தலைவராகவும். இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த எம். முஹம்மது ஹூஸைன் கனி அவர்கள் மண்டல பொதுச் செயலாளராகவும். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சகோ ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனையில் மத்திய மண்டலத்தின் துணைத் தலைவராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே. பி. முஹம்மது அவர்களையும், துணைச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டம் மீ-மீசலைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மது அவர்களையும் தேர்வு செய்தனர்.

அல் கஸ்ஸாவிலிருந்து வருகைபுரிந்திருந்த சிறப்புப் பேச்சாளர் மவுலவி அலாவுதீன் பாகவி அவர்களின் உரைக்குப் பின் தாயகத்திலிருந்து த.மு.மு.கவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும் இணையம் வழியாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்கள் தங்களது உரையில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து தொடர்ந்து மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபடவும் அதற்கு உறுதுணையாக மற்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் ஏற்புரைக்குப்பின், பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு கிழக்கு மண்டல த.மு.மு.க தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் பதில் அளித்தார்கள். இறுதியாக சகோ. நூர் முஹம்மது நன்றி உரையாற்ற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.

இப்பொதுக்குழுவில் நூற்றி ஜம்பதிற்கும் மேற்பட்ட த.மு.மு.க உறுப்பினர்கள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இப்பொதுக் குழுவை த.மு.மு.க மத்திய மண்டல தொண்டரணியினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகத்தின் பணிகள் சிறக்க துவாச் செய்தவர்களாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமுதாயப் பணியின் கடமைகளை உணர்ந்தவர்களாக விட்டபணிகளைத் தொடர வெற்றிக்களிப்புடன் களைந்து சென்றார்கள்...

Saturday, October 31, 2009

கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.


தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல. இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.

இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது... இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ... குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே... அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள்? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார். தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா... ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும், இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி. தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும், பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’ என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி... ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல...’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத் தாங்கலை... இதுல யுகங்கள் தோறுமா?
நன்றி: நடைவண்டி

Monday, October 26, 2009

மனைவியை மொட்டையடித்து மானபங்கப்படுத்திய கொடுமைக்காரக்கணவன் கைது.

நடத்தையில் சந்தேகப்பட்டு பெல்ட்டால் அடித்து சித்ரவதை:
மனைவியை மொட்டையடித்து மானபங்கப்படுத்திய கணவர் கைது
உடந்தையாக இருந்த மாமியார், மைத்துனரும் சிறையில் அடைப்பு

கோவை, அக். 26:இளம்பெண்ணை மொட்டை அடித்து சித்ரவதை செய்த கணவர், மாமியார், கொழுந்தன் கைது செய்யப்பட்டனர்.

கோவை கோட்டைமேட்டை சேர்ந்தவர் இப்ராகிம் ஷா(30). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த அப்துல்கபூர் மகள் நதீரா பானு(27) என்பவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. மகன்கள் அசாருதீன்(10), சைபுல்(5), மகள் சப்ரின்(7).

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவியை இப்ராகிம் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி ஜமாத்தில் புகார் செய்யப்பட்டு, அவ்வப்போது சமரசம் செய்து வைத்தனர். கடந்த வாரம் நதீராவை, இப்ராகிம்ஷா அடித்து சித்ரவதை செய்தார். இதனால் நதீரா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடந்த 23ம் தேதி இப்ராகிம், மாமனார் வீட்டுக்கு சென்று, சமாதானம் பேசி மனைவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். தான் 2வது திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என நதீராபானுவை இப்ராகீம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு நதீராபானு மறுத்தார். ஆத்திரம் அடைந்த இப்ராகிம், அவரது தம்பி பைரோஸ்(27) ஆகியோர் நதீராவை அடித்ததோடு, வலுக்கட்டாயமாக நதீராபானுவுக்கு மொட்டை அடித்தனர். வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

மொட்டையடிக்கப்பட்ட நிலையில், தாய் அழுததை நேற்று முன்தினம் இரவு பார்த்த நதீராபானுவின் மகன் அசாருதீன், தாத்தா அப்துல்கபூரிடம் தெரிவித்தான். இதையடுத்து அப்துல்கபூர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இப்ராகிம் வீட்டுக்கு திரண்டு சென்றனர். இப்ராகிமும், குடும்பத்தினரும் அவர்களை தடுத்து தகராறு செய்தனர்.

இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சென்று, நதீராபானுவை மீட்டனர். இப்ராகிம், பைரோஸ் ஆகியோரை கைது செய்தனர்.

உடந்தையாக இருந்த இப்ராகிம் தாய் சரீபா, அக்கா ஆமினாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இப்ராகிம் வீட்டை விடிய விடிய முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சரீபா நேற்று காலை கைது செய்யப்பட்டார். ஆமினாவை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மானபங்கம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Sunday, October 18, 2009

கோவா குண்டு வெடிப்பு சம்பவம் இந்து அமைப்பினர் 5 பேர் கைது

கோவா குண்டு வெடிப்பு சம்பவம் இந்து அமைப்பினர் 5 பேர் கைது
3 குண்டுகள் செயலிழப்பு


மர்கோவா, அக். 18- கோவாவில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, "சனாதன் சன்ஸ்தா" என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிக்காத மூன்று குண்டுகளையும் போலீசார் செயல் இழக்கச் செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு கோவா மாநிலம் மர்கோவா நகரில் கிரேஸ் சர்ச் அருகே நரகாசுரன் உருவமொம்மைகள் நேற்று முன்தினம் இரவு எரிக்கப்பட்டன. அந்த இடத்தில் ஸ்கூட்டர் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற மல்கோன்டி பாட்டீல் என்பவர் பலியானார். யோகேஷ் நாயக் என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் சிக்கின. அவற்றை போலீசார் செயலிழக்கச் செய்தனர். வாஸ்கோவில் சாந்த துர்கா கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டையும் போலீசார் செயலிழக்கச் செய்னர். ஜெலட்டின் குச்சிகள், கடிகாரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உதவியுடன் அந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்கூட்டரின் உரிமையாளர் "சனாதன் சன்ஸ்தா" அமைப்பை சேர்ந்த நிஷாத் பக்லே எனத் தெரிந்தது. குண்டு வெடிப்பில் பலியான மல்கோன்டி பாட்டீல், படுகாயம் அடைந்த யோகேஷ் நாயக் ஆகியோரும் அதே அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. இது, மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் பிரக்யா சிங்குடன் தொடர்புடைய அமைப்பாகும்.

இதைத் தொடர்ந்து சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு வெளிநாட்டினர் உள்பட 167 பேர் தங்கியிருந்தனர். 30 அறைகளில் சோதனை நடத்திய போலீசார் கடிகாரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட சந்தேகத்துக்கிடமான பொருட்களை கைப்பற்றினர். அந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இருந்து சென்றுள்ள தீவிரவாத தடுப்பு படையினரும் கோவாவில் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சனாதன் சன்ஸ்தா உறுப்பினர்கள் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி: தமிழ்முரசு

Sunday, October 11, 2009

உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள்! நான்குபேரில் ஒருவர் முஸ்லிம்...

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.


அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2-வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ** 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87-ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10-ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 20 சதவீத முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத நாடுகளில் மட்டும் 30 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்தோனேசிய மக்கள் தொகையில் 88.2 சதவீதம் பேரும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் 96.3 சதவீதம் பேரும் முஸ்லிம்கள். வங்காளதேசம், எகிப்து, நைஜீரியா, ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொராக்கோ, ஆகியவை அதிக முஸ்லிம் மக்கள் கொண்ட நாடுகள் ஆகும்.

சிரியாவில் உள்ள முஸ்லிம்களைவிட சீனாவில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். ஜோர்டான், லிபியா இரு நாட்டு முஸ்லிம்களை விட ரஷியாவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

** குறிப்பு: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Source:

http://www.arabnews.com/?page=4&section=0&article=127214&d=9&m=10&y=2009

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hg1ZPw_iDZPtk40pc-eurHFUOlSQD9B6LBS80

http://www.twocircles.net/2009oct07/global_muslim_population_estimated_1_57_billion.html

http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=3282180

http://www.maalaimalar.com/2009/10/11123950/CNI02201101009.html

Saturday, October 10, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (மமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)
வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எமது வாழ்த்துக்கள்.

Tuesday, October 6, 2009

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!


சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்ஸ இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி.அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

பயங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.
அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

ஆனால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?
ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

உலகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

இது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது!

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

“குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

கமல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

Wednesday, September 30, 2009

தமிழ்நாடு மின்சாரா வாரியத்தின் அலட்சியம்! வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின் கம்பம்.

தமிழ்நாடு மின்சாரா வாரியத்தின் அலட்சியம்!
வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின் கம்பம்.

நடவடிக்கை எடுக்குமா மின்சாராவாரியம்?

வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின்கம்பம்.

தேதி: 30-09-2009
அடைதல்

கோட்ட உதவி மின் பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின்சாரா வாரியம்,
சிக்கல்,
இராமநாதபுரம் மாவட்டம்.


பொருள்: தவறுதலாக நிறுவப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றி உரிய இடத்தில் ஊன்றுவது சம்பந்தமாக.

இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிராமம் ஆண்டிச்சிகுளம் சாலையில் அருந்ததியர் காலனிக்கு வடக்குப் பகுதியில் பட்டா எண்: 548, புல எண்: 129ல் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கமும் வீடுகள் அமைந்திருக்க அதன் நடுவே 13 அடிச்சாலை செல்கிறது மின்சாரா வாரியத்தின் மூலம் மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன தெருவின் தொடக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பம் சரியாகவும் அதற்கடுத்து நிறுவியுள்ள மின் கம்பம் தெருவின் நடுவிலும் நிறுவப்பட்டுள்ளது (பார்க்க படம்) அந்தத் தெருவில் வசிப்பவர்கள் வாகனங்களின் மூலம் பொருள்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.

எனவே மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் தவறுதலாக நிறுவப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி முறையாக அதன் உரிய இடத்தில் நிறுவித்தர வேண்டுமாய் அங்கு வசிக்கும் பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

கிராம மக்களின் சார்பாக
எம். ஹூஸைன் கனி
சிக்கல்.

நகல்கள்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக மின்சார துறை அமைச்சர் அவர்கள்,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், இராமநாதபுரம்,
கோட்ட மின் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு மின்சாரா வாரியம், பரமக்குடி,
ஊராட்சி மன்றதைலைவர் அவர்கள், சிக்கல்.

Sunday, September 27, 2009

நான் ஏன் புஷ்ஷின் மீது செருப்பை வீசினேன்.

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.


முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.

எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்ஸபலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்ஸ ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடுஸ எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.

ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்

நன்றி . .போராட்டம் வலைப்பதிவு

Wednesday, September 9, 2009

மோடி அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர்!

அகமதாபாத்: நரேந்திர மோடி அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜெஹான். இவர் மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர். இவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜிஷான் ஜௌஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அதிகாலையில் அகமதாபாத் அருகே போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். குஜராத் கலவர சம்பவம் தொடர்பாக மோடியை சுட்டுக் கொல்ல ஊடுறுவியர்கள் என்று அப்போது போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் இது போலி என்கவுண்டர், திட்டமிட்ட படுகொலை என்று அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

அப்போதைய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வன்சாரா மற்றும் காவல்துறை அதிகாரிகளே இந்த கொடூரமான கொலைக்குக் காரணம் என்றும் மாஜிஸ்திரேட் தமங் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சோராபுதீன் என்பவரை போலி எண்கவுண்டர் செய்து கொலை செய்த வழக்கில் சிக்கி வன்சாரா உள்ளிட்ட போலீஸார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்கது.

இஷ்ரத் ஜெஹான் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம், 3 உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை முன்பு நியமித்தது. இந்த விசாரணைக் குழு, தனது விசாரணையின்போது இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலியான முறையில் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டுபிடித்தது.

தங்களது சுய நலத்துக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இஷ்ரத் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றதாகவும், பதவி உயர்வு பெறுவதற்காகவும், இந்தக் கொலைகளை செய்து முதல்வர் நரேந்திர மோடியிடம் நற்பெயரை சம்பாதிப்பதற்காகவும் இந்த என்கவுண்டரை திட்டமிட்டு நடத்தியதாகவும் விசாரணைக் குழு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கொடூரக் கொலைகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும் நீதிபதி 2 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். வன்சாரா தவிர, என்.கே.அமீன் (இவரும் சோராபுதீன் வழக்கில் கைதானவர்), அகமதாபாத் போலீஸ் கமிஷனர் கே.ஆர்.கெளசிக், பி.பி.பாண்டே, தருன் பரோட் மற்றும் சில மூத்த காவல்துறை அதிகாரிகளே இந்த போலி என்கவுண்டருக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதியின் தீர்ப்பின் விவரம்...

குற்றப் பிரிவு போலீஸார் இஷ்ரத் மற்றும் 3 பேரை மும்பையிலிருந்து 2004ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கடத்தி அகமதாபாத் கொண்டு வந்துள்ளனர். நான்கு பேரையும் ஜூன் 14ம் தேதி இரவு தங்களது கட்டுப்பாட்டு இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

ஆனால் ஜூன் 15ம் தேதி அதிகாலையில், அகமதபாத்துக்கு வெளியே உள்ள கோதார்பூர் பகுதியில் வைத்து என்கவுண்டரில் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் அதற்கு முதல் நாள் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள்தான் இஷ்ரத் இறந்திருக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலீஸ் தரப்பு வாதத்தை பொய்யாக்குவதாக அமைந்தது.

தங்களது சதித் திட்டத்தை உண்மையானது போல காட்டுவதற்காக இஷ்ரத்தின் இறந்த உடலை தொடர்ந்து சுட்டு ஏராளமான தோட்டாக்களை உடலில் செலுத்தியுள்ளனர் போலீஸார்.
இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்துமே போலீஸார் போட்ட செட் ஆகும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தண்டிக்க வேண்டும் - இஷ்ரத் குடும்பம்

அப்பாவியான தங்களது மகளை திட்டமிட்டுக் கொன்று விட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஷ்ரத்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகமதாபாத் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போலி என்கவுண்டர் அல்ல-குஜராத் அரசு:

இதற்கிடையே, இஷ்ராத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில் கொல்ல்படவில்லை என்று குஜராத் அரசு மறுத்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையையும் அது நிராகரித்துள்ளது.

இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெய நாராயணன் வியாஸ் கூறுகையில், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் தமங் வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது, அவசர கதியிலானது இது.

இதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம். சட்டத்தின் பார்வையில் இது மிகவும் மோசமான கருத்து.

இதே வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து அதன் விசாரணைக் காலம் இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை உள்ள நிலையில், எப்படி நீதிபதி தமங் இப்படி ஒரு கருத்தைக் கூறலாம் என்று தெரியவில்லை என்றார் வியாஸ்.

Friday, September 4, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்: தமுமுக இரங்கல்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

ஆந்திர முதல்வர் வை. ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெஇகொப்டர் விபத்தில் உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. தனது அற்பணிப்பு மிக்க சேவைகளினால் பெரும் மக்கள் ஆதரவை பெற்ற தலைவராக வை.எஸ்.ஆர் விளங்கினார். 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தஇன் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்இம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அதனை நிறைவேற்றியவர் வை.எஸ்.ஆர். இவ்வாறு அவர் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய பிறகு அது பெரும் சட்டசிக்கலை எதிர்நோக்கிய போது அதனை சாதுரியமாக தீர்த்து இடஒதுக்கீடு பயனை ஆந்திர முஸ்லிம்கள் அனுபவிக்க அவர் வழிவகுத்ததை என்றென்றும் முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவில் நிறுத்திக் கொள்ளும். அவரது மக்கள் ஆதரவு செயல்களின் காரணமாக தான் அவர் மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றார். சீரிய முதல்வரை இழந்து வாடும் ஆந்திர மக்களுக்கும் வை.எஸ்.ஆரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

(எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
தலைவர் தமுமுக
ஒருங்கிணைப்பாளர் மனிதநேய மக்கள் கட்சி

Sunday, August 30, 2009

அனைத்து தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்

கூத்தாநல்லூரில் நேற்று (ஆக 29) இஃப்தாருக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் முஹம்மது அதே ஊரைச் சேர்ந்த சமூக விரோதி அனஸ் மற்றும் அவனது கூட்டாளிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்திருப்பீர்கள். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க அவரது தனி செல்லுக்கு (00914425671441) என்ற எண்ணில் இணைப்பில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு உடனடியாக ஏராளமான ஃபேக்ஸ்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஜஸாக் அல்லாஹ்!

திருவாரூர் மாவட்ட தமுமுக சார்பாக

Saturday, August 29, 2009

ST கார்கோவின் புதிய சேவை! Speed Track Gift Service

உங்கள் வீட்டில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நடக்குமம் அனைத்துவித விசேசங்களுக்கும் நீங்கள் மகிழ்வுடன் கொடுக்க விரும்பும் அன்பளிப்புகள், வாழ்த்து அட்டைகள், கேக்குகள், பூங் கொத்துகள், ஸ்வீட்ஸ் என அனைத்து விதமான பொருட்களும் நீங்கள் கொடுக்க விரும்பியவருக்கு 24 மணி நேரத்தில் கொடுக்கப்படும் ‍என்பதை எஸ்.டி குழுமம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் விபரங்களுக்கு: http://www.stcargosaudi.com/gift-service.html

விபரங்களுக்கு படத்தை கிளிக்கி பார்வையிடவும்.

Tuesday, August 25, 2009

முஸ்லிம்களை வதைக்கும் வக்பு வாரியம்.

ன்றி:இனியவன்






-மாயாவி

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமான கொவ்ஸ் மைதீன் பேட்டை வக்புக்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வீடுகள் கட்டப்பட்டன. கலைஞர் ஆட்சியில் அரசு சார்பில் அவ்வீடுகள் ஏழைகளுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.உடனே அன்று வக்பு வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி வக்ப் வாரியத்திற்கு சொந்தமான வீடுகளை தமிழக அரசு ஒதுக்க கூடாது.வக்ப் வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.பல முயற்சிகளுக்கு பின்னர் அந்த இடங்கள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்குள் தேர்தல் வந்து விடவே ஹைதர் அலி வக்ப் வாரிய பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற கலைஞரின் நண்பர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வீடுகளை வைத்து சமூகத்தின் மதிப்பை பெற்று விட வேண்டும் என்று களத்தில் இறங்கினார்.பாவம் இளிச்சவாய் பொதுமக்கள்.காசிமேடு பகுதியில் நூறு வீடுகளும் துரைப்பாக்கம் பகுதியில் 176 வீடுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிலும் 10% இமாம்களுக்கும் 10% மோதினர்களுக்கும்,10% விதவைகளுக்கும்,10% கை விடப்பட்ட பெண்களுக்கும்,10% வேலை இல்லாத ஆலிம்களுக்கும் மீதி 50% மற்ற ஏழை மக்களுக்கும் என ஒதுக்கப்பட உள்ள நிலையில் 5 நாட்கள் வீடுகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.வாடகை 250 என்றும் அட்வான்ஸ் 1000 என்றும் வீடு (வெறும்) 250 Sqft என்றும் கூறப்பட்டது. இதை கேட்டதும் வக்பு வாரியத்தின் முன் 17.8.09 திங்கள் கிழமை முதல் மக்கள் சாரை சாரியாக குவிந்தனர்.விண்ணப்பங்கள் வாங்க வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர் வாரிய அதிகாரிகள்.போலீஸ் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.



முதல் நாள் இரவிலேயே ரோட்டிலேயே உட்கார்ந்து அங்கேயே படுத்து தூங்கி காலையில் விண்ணப்பம் வாங்க வந்த முஸ்லிம்களை பார்த்து அந்த பகுதியில் வழக்கமாக தெருவில் வசிக்கும் மக்களே ஆச்சரியப்பட்டனர்.கைக்குழந்தைகளோடு இயற்க்கை உபாதைகளை நிறைவேற்றக்கூட வசதி இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதிகாலை முதலே வரிசையில் நின்று கொண்டிருந்தது பார்க்கவே கொடுமையாக இருந்தது.சமுதாயத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற வக்பு வாரியத்தின் எண்ணம் நல்லபடியாக நிறைவேறியது.வெறும் 276 வீடுகளுக்கு இது வரை 15,000விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை வைத்து அரசியல் செய்யும் வாரியத்தின் கூத்தை பார்த்து எல்லோரும் காரி துப்பினர்.கூட்டத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறிய போலீசார் ஒரு கட்டத்தில் தடியடி நடத்தும் சூழ்நிலை உருவானது.கடைசியாக போலீசார் வக்பு வாரிய உயர் அதிகாரியிடம் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று கூறியதால் வியாழன் கிழமையோடு விண்ணப்பம் வழங்குவதை நிறுத்தி கொண்டனர்.


மொத்த ஒதுக்கீட்டில் வக்பு வாரிய உயர் அதிகாரிகளுக்கும் வாரிய உறுப்பினர்களுக்கும்(வாங்காதவர்களும் உண்டு)அவர்களுக்கு தேவை பட்டவர்களுக்கும் போக மீதி உள்ள இடங்களுக்குத்தான் இவ்வளவு போட்டி.நவீன யுகத்தில் இன்டர்நெட் போன்றவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதிகள் எல்லாம் வந்து விட்ட பிறகு மக்களை வரிசையில் நிற்க வைத்து கஷ்டப்படுத்துவது பக்கா அரசியல். வெள்ள நிவாரணம் என்ற பெயரில் திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கசமுசா போன்று ஏற்பட்டு ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்.அப்போது இரங்கல் கவிதையை பாடுவதை தவிர வாரிய தலைவரால் என்ன செய்ய முடியும்.மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கிளம்பி தான் தோன்றி தனமாக வேலை செய்வதை விட்டு உருப்படியான வேலைகளை வக்பு வாரியம் பார்க்க வேண்டும்.

Monday, August 24, 2009

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா செய்த மறைமுகமான உதவிகளால்தான் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் என்றும் கோகலே தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ராணுவ ரீதியிலான உதவிகளை இந்தியா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியல் நெருக்குதல்கள் (தமிழக கட்சிகள்) காரணமாக வெளிப்படையாக உதவிகள் செய்யாத மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் கூறுகிறார் கோகலே.

இந்தியா மறைமுகமாக மிகப் பெரிய உதவிகளைச் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பகிரங்கமாக ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததுமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் கோகலே.

கோகலேவின் நூலிலிருந்து சில பகுதிகள்...

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே, அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பார்கள், ஒன்று கூடுவார்கள், சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராஜபக்சே.

அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் இலங்கைப் படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கைப் படையினரை பலப்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராஜபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார்.

ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் என்ற பட்டியலுடன் அவரது சகோதரர்கள் பசில் மற்றும் கோத்தபயா ஆகியோர் டெல்லி விரைந்தனர். அந்தப் பட்டியலில் - வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

ராஜபக்சேவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இந்தியா அப்போது இருந்தாலும் கூட அவர் கேட்ட ஆயுதப் பட்டியல் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்தியத் தரப்பிலிருந்து சரி, இல்லை என்ற பதில் வராததால், சற்று ஏமாற்றத்துடனேயே பசிலும், கோத்தபயாவும் கிளம்பிப் போனார்கள். இருந்தாலும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு உடனடியாக பதில் தராமல் இருந்ததற்குக் காரணம் உள்ளூரில் அதற்கு இருந்த அரசியல் நெருக்கடிகளே. ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவை அப்போது காங்கிரஸ் கட்சி நம்பியிருந்தது. திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனே ஆட்சி கவிழும் அபாயம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க நடவடிக்கைக்கு நிச்சயம் கருணாநிதி ஆதரவு தர மாட்டார், அதை அனுமதிக்கவும் மாட்டார் என்பதால், இந்திய அரசு தயக்கம் காட்டியது.

எனவே இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதிலலை என்ற முடிவை காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்தது.

முதலில் போன ஹெலிகாப்டர்கள்...

2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வழங்கி ஹெலிகாப்டர்கள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருந்தனவாம்.

மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த ஹெலிகாப்டர்கள் உதவிகரமாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால்.

ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.

2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது. ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம். இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.

இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.

2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது.

உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன.

அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள். இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உஷார்படுத்தும்.

உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.

இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் - இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார்.

மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. அத்தனையையும் தகர்த்ுத விட்டோம்.

ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.

இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.

இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை.

புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது.

கடந்த மார்ச் மாதமே, இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம், அப்போது இந்தியாவில் லோக்சபா ஜூரம் தீவிரமாக இருந்ததால்.

ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள், இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென் பிராந்திய கமாண்ட் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007ம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கி விட்டது.

இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு.

இந்தத் தீவு ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது.

இந்த தீவை கடற்புலிகளைக் கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை.

ஆனால் 2007ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை தூக்கிக் கொண்டு தப்பினர்.

இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடனடியாக உதவி செய்தது. ஆனால் என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட, பாகிஸ்தான், சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது இந்தியா கடுப்பாக்கியது.

இந்தியாவின் புழக்கடை வழியாக சீனாவும், பாகிஸ்தானும் மெல்ல மெல்ல ஊடுறு வருவதை இந்தியா மெளனம் மற்றும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் 2007ம் ஆண்டு மே மாதம் எம்.கே.நாராயணன் இப்படிக் கூறினார் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் மிகப் பெரிய சக்தி என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் ஆயுதம் வாங்குவதை அது கைவிட வேண்டும். எங்களது வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை இலங்கை உணர வேண்டும் என்றார்.

இலங்கைக்கு உதவ வேண்டும். அதேசமயம், வெளிப்படையான ஆயுத உதவிகளால் ஆட்சி பறி போகும் என்ற இரட்டைக் குழப்பத்தில் அப்போது இருந்தது காங்கிரஸ் அரசு. இருப்பினும் இந்தக் குழப்பம் ஏற்பட உண்மையில் இலங்கை காரணம் அல்ல. அது காங்கிரஸ் அரசாக ஏற்படுத்திக் கொண்ட குழப்பம்தான்.

ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதேசமயம், சீனா, பாகிஸதானையும், இலங்கைக்குள் விட்டு விடக் கூடாது என்ற இரட்டை நப்பாசையால் ஏற்பட்ட குழப்பம் அது.

ஆனால் இலங்கைக்கு அந்தக் குழப்பம் இல்லை. இந்தியா இல்லாவிட்டால் சீனா, பாகிஸ்தான் என அது தெளிவாகவே இருந்தது.

இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம் ...

இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் - முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம்.

முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர். மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம்.

அதேசமயம், பாகிஸ்தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார்.

இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிஸ்தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிஸ்தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே.

இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.

இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.

2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது.

உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன.

அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள். இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உஷார்படுத்தும்.

உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.

இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் - இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார்.

மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. அத்தனையையும் தகர்த்ுத விட்டோம்.

ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.

இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.

இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை.

புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது.

கடந்த மார்ச் மாதமே, இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம், அப்போது இந்தியாவில் லோக்சபா ஜூரம் தீவிரமாக இருந்ததால்.

ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள், இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென் பிராந்திய கமாண்ட் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007ம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கி விட்டது.

இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு.

இந்தத் தீவு ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது.

இந்த தீவை கடற்புலிகளைக் கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை.

ஆனால் 2007ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை தூக்கிக் கொண்டு தப்பினர்.

இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடனடியாக உதவி செய்தது. ஆனால் என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட, பாகிஸ்தான், சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது இந்தியா கடுப்பாக்கியது.

இந்தியாவின் புழக்கடை வழியாக சீனாவும், பாகிஸ்தானும் மெல்ல மெல்ல ஊடுறு வருவதை இந்தியா மெளனம் மற்றும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் 2007ம் ஆண்டு மே மாதம் எம்.கே.நாராயணன் இப்படிக் கூறினார் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் மிகப் பெரிய சக்தி என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் ஆயுதம் வாங்குவதை அது கைவிட வேண்டும். எங்களது வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை இலங்கை உணர வேண்டும் என்றார்.

இலங்கைக்கு உதவ வேண்டும். அதேசமயம், வெளிப்படையான ஆயுத உதவிகளால் ஆட்சி பறி போகும் என்ற இரட்டைக் குழப்பத்தில் அப்போது இருந்தது காங்கிரஸ் அரசு. இருப்பினும் இந்தக் குழப்பம் ஏற்பட உண்மையில் இலங்கை காரணம் அல்ல. அது காங்கிரஸ் அரசாக ஏற்படுத்திக் கொண்ட குழப்பம்தான்.

ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதேசமயம், சீனா, பாகிஸதானையும், இலங்கைக்குள் விட்டு விடக் கூடாது என்ற இரட்டை நப்பாசையால் ஏற்பட்ட குழப்பம் அது.

ஆனால் இலங்கைக்கு அந்தக் குழப்பம் இல்லை. இந்தியா இல்லாவிட்டால் சீனா, பாகிஸ்தான் என அது தெளிவாகவே இருந்தது.

இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம் ...

இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் - முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம்.

முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர். மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம்.

அதேசமயம், பாகிஸ்தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார்.

இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிஸ்தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிஸ்தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே.