.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, November 28, 2012

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ


இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ


மார்கண்டேய கட்ஜு எழுதி தி ஹிந்துவில் அக்டோபர் 11 அன்று வெளியான Rid our body politic of communal poison என்னும் கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் மருதன். இனி அவருடைய கட்டுரை தமிழில்...

நன்றி:  மருதன் & தமிழ்பேப்பர். 

இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.

150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? இன்று, முஸ்லிம்கள் இந்துக்களின் இல்லங்களில் வாடகைக்கு வீடு கிடைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யத் திறனற்ற காவல்துறையினர் (அறிவியல்பூர்வமாக விசாரணை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு இல்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்து பிரச்னைக்குத் ‘தீர்வு’ கண்டுவிடுகிறார்கள். இவ்வாறு கைதானவர்களில் பலர் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தபிறகு கடைசியில் அப்பாவிகள் என்று தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, முஸ்லிம்கள் இந்தியாவில் அந்நியப்பட்டு கிடக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில், நிலைமை இதைவிட மோசம். அங்கே சிறுபான்மையினர் தீவிரவாதிகளிடமும் மதவாதிகளிடமும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

எப்போது தோன்றியது?

1857 இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. 1857க்கு முன்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றாகவே வாழ்ந்தனர். சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனால், இரு சகோதரர்களுக்கும் இரு சகோதரிகளுக்கும் இடையில்கூட இப்படிப்பட்ட வேறுபாடுகள் எழுவது உண்டு அல்லவா?

இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த முஸ்லிம்கள் பல கோயில்களை உடைத்தது உண்மை. ஆனால் அவர்களுடைய வழி வந்த முஸ்லிம் தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் வகுப்பு ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர். ஒருவகையில், தங்கள் நலனுக்காகத்தான் அவர்கள் இதைச் செய்தனர். காரணம், அவர்கள் ஆட்சி செய்யவேண்டியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்து கோயில்களை உடைத்தால் உடனே கலவரம் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவரும் கலவரத்தை விரும்பவில்லை. முகலாயர்கள், ஆவாத் நவாபுகள், ஆர்காட் முர்ஷிதாபாத், திப்பு சுல்தான், ஹைதரபாத் நிஜாம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் மத ஒற்றுமையை வளர்ப்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

1857ல் முதல் சுதந்தரப் போர் வெடித்தபோது, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே பிரிட்டனை எதிர்த்தனர். கலகத்தை அடக்கியபிறகு, பிரிட்டிஷார் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டுமானால் அதற்கு ஒரே வழி, பிரித்து ஆள்வதுதான். சர் சார்லஸ் வுட், (இந்திய செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) வைஸ்ராய் லார்ட் எல்ஜின் என்பவருக்கு 1862ல் எழுதிய குறிப்பு இது. ‘இந்தியாவில் நாம் அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்குக் காரணம் ஒருவருக்கு எதிரான இன்னொருவரை நிறுத்தி மோதவிட்டதுதான். இதை நாம் தொடர்ந்து செய்தாகவேண்டும். ஒரே மாதிரியான உணர்வை அவர்கள் பெற்றுவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்யுங்கள்.’

பிரித்து ஆளவேண்டும்!

ஜனவரி 14, 1887 அன்று விஸ்கவுண்ட் க்ராஸ் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் டுஃப்பரின் என்பவருக்கு இவ்வாறு எழுதுகிறார். ‘மத ரீதியிலான இப்படிப்பட்ட பிளவு நமக்குச் சாதகமாக இருக்கும். இந்தியக் கல்விமுறை குறித்தும் பாடப் புத்தகங்கள் குறித்துமான உங்கள் விசாரணை கமிட்டியின் மூலம் சில நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.’

ஜார்ஜ் ஹாமில்டன் (செகரட்டரி ஆஃப் ஸ்டேட்) கவர்னர் ஜெனரல் கர்சனுக்கு இவ்வாறு எழுதினார். ‘இந்தியாவை நாம் ஆள்வதற்குத் தடையாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம்தான்… படித்த இந்தியர்களை இரு பிரிவுகளாக (இந்துக்கள், முஸ்லிம்கள்) பிரிக்கமுடிந்தால் நம் பிடியை உறுதிபடுத்திக்கொள்ளமுடியும். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும்படியாக நம் பாடப்புத்தகங்களை நாம் திட்டமிட வேண்டும்.’

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை ஏற்படவேண்டுமென்றே இப்படிப்பட்ட திட்டங்கள் 1857க்குப் பிறகு தீட்டப்பட்டன. பல்வேறு வழிகளில் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டது.

மதத் தலைவர்களுக்கு லஞ்சம் : பிரிட்டிஷ் கலெக்டர் ரகசியமாக ஒரு பண்டிட்ஜியைச் சந்தித்து, பணம் கொடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசச் சொல்வார். அதே போல் ரகசியமாக ஒரு மௌல்வியைச் சந்தித்து பணம் கொடுத்து இந்துக்களுக்கு எதிராக அவரைப் பேச வைப்பார்.

மறைக்கப்பட்ட வரலாறு : தொடக்கத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பல இந்து கோயில்களை இடித்தது உண்மை. ஆனால், பிற்காலத்தில் வந்த கிட்டத்தட்ட அனைவரும் (அக்பர் போன்றவர்கள்) இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். ஆனால் நம் குழந்தைகளுக்கு இந்த இரண்டாவது பாகம் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கஜினி முகமது சோமநாதர் கோயிலை உடைத்தார் என்றுதான் அவர்கள் வரலாற்றில் கற்கிறார்களே தவிர, திப்பு சுல்தான் போன்றவர்கள் இந்து விழாக்களில் பங்கேற்றார்கள் என்பதைக் கற்பதில்லை.

தூண்டிவிடப்பட்ட மோதல்கள் : வகுப்புவாத மோதல்கள் அனைத்தும் 1857க்குப் பிறகே உருவாகின. பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இசை வாத்தியங்களை ஒலிக்கவிடுவது, இந்து விக்கிரகங்களை உடைப்பது என்று மத உணர்வுகளைத் தூண்டிவிடும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

1909ல் அமல்படுத்தப்பட்ட மிண்டோ மார்லி சீர் திருத்தம், மதவாத அடிப்படையில் தனித் தொகுதி முறையைக் கொண்டுவந்தது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாள்வதற்காக மேற் கொள்ளப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கை இது.

இப்படி வகுப்புவாதம் என்னும் நஞ்சு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டது. 1947ல் பிரிவினை ஏற்படும்வரை இந்தச் செயல்பாடு தொடர்ந்தது. இப்போதும்கூட மத வெறுப்பை வளர்த்துவிட்டு குளிர் காய்பவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும்போதும் தொலைக்காட்சி சானல்கள் என்ன சொல்கின்றன? இந்திய முஜாஹிதின் அல்லது JeM அல்லது HUJI என்று ஏதாவதொரு அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாக எஸ்எம்எஸ் வந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு ஈமெயிலையோ எஸ்எம்எஸ்சையோ எந்தவொரு விஷமியும் யாருக்கும் அனுப்பிவைக்கமுடியும் அல்லவா? ஆனால், இதை மறுநாளே டிவியில் சொல்வதன்மூலம் எப்படிப்பட்ட தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள் தெரியுமா? அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள் என்று இந்துக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், 99 சதவிகித மக்கள், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமைதியையும் நன்மையையுமே விரும்புகிறார்கள்.

பாபர் மஸ்ஜித், ராம் ஜென்மபூமி கிளர்ச்சியின்போது, மீடியாவில் ஒரு பிரிவினர் (குறிப்பாக இந்தி அச்சு ஊடகம்) கர சேவகர்கள் போலவே செயல்பட்டதை மறக்கமுடியுமா?

பெங்களூரு பதட்டம்

‘அசாமில் நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றிருக்கிறீர்கள் எனவே இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.’ பெங்களூரு மற்றும் பிற இடங்களில் வசிக்கும் வடகிழக்கு இந்தியர்களுக்குச் சமீபத்தில் இப்படிப்பட்ட எஸ்எம்எஸ் செய்திகள் அனுப்பப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே, இது பதட்டத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு முஸ்லிம்களுக்கு இந்த விஷயம், தெரியவந்ததும் அவர்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு உடனடியாக விருந்து தயார் செய்தார்கள். யாரோ சிலரின் தவறான வதந்திகளை நம்பாதீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களுக்கு எதிரிகள் அல்லர் என்றும் தெரியப்படுத்தினார்கள்.

இத்தகைய இழிவான வழிமுறைகளைச் சிலர் கையாள்வதை இந்தியர்கள் உணரவேண்டிய தருணமிது. சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒன்றுபோல் மதித்து நடப்பதுதான். மாமன்னர் அக்பர் காட்டிய வழி இது. அவர் அனைத்து மக்களையும் ஒன்றுபோல் மதித்தார். அக்பர், அசோகர் போன்ற உயர்ந்த ஆட்சியாளர்களை உலகம் இதுவரை கண்டதில்லை. (Hinsa Virodhak Sangh Vs. Mirzapur Moti Kuresh Jamat குறித்த என் தீர்ப்பை இணையத்தில் பார்க்கலாம்.)

1947ல் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது, அதீதமான மத விருப்பங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. பாகிஸ்தான் தன்னைத் தானே ஓர் இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது போல் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்று நேருவுக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் அப்போது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நம் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா இந்து நாடு அல்ல அது மதச்சார்பற்ற நாடு என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதனால்தான், ஒவ்வொரு அம்சத்திலும் நம் அண்டை நாடான பாகிஸ்தானைக் காட்டிலும் நாம் மேலான நிலையில் இருக்கிறோம்.

மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதாகும். மதத்துக்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதாகும். அரசுக்கு மதம் கிடையாது என்பதாகும். என்னைப் பொருத்தவரை, இந்தியா ஒன்றுபட்டு இருப்பதற்கும் வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதற்கும் ஒரே மார்க்கம், மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதுதான்.

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

http://www.thehindu.com/opinion/lead/rid-our-body-politic-of-communal-poison/article3985402.ece

Tuesday, July 3, 2012

குழந்தைகளையும் பெண்களையும் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல்துறை.

காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.
இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.
கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று  சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’  இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.
வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.
இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.
அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.
அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.
டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்
குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.
இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.
தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.
திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.
தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.  ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
____________________________________________________________________
- தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
படங்கள் உதவி நக்கீரன்
நன்றி: வினவு டாட் காம்.