.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, June 12, 2009

மாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது! பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை.

வெயிலில் நிற்க வைப்பது, தலையில் குட்டுவதற்கு தடை
மாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது
பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை


சென்னை, ஜூன்.12 மாணவர்களை அடிப்பது, வெயிலில் நிற்கவைப்பது, தலையில் குட்டுவது போன்ற எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

65 வகையான புகார்கள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 4,200 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 1,600 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 70 லட்சம் மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள்.

இப்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் பெற்றோர்களிடம் இருந்து வந்துள்ளன. மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை வசூலிக்கப்படுகிறது, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை வெயிலில் நிற்க சொல்லி தண்டனை கொடுக்கிறார்கள், பிரம்பால் அடிக்கிறார்கள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 சான்றிதழ் வாங்கும்போது மாற்று சான்றிதழ் வழங்கும்போது மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது உள்பட 65 வகையான புகார்கள் வந்துள்ளன.

சுற்றறிக்கை

ஏற்கனவே மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என்று அரசாணை இயற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மீறியும் மாணவர்கள் அடிக்கப்படுகிறார்கள் என்று புகார் வந்துள்ளதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நன்கொடை- குற்றம்
எந்த ஒரு மாணவரையும் அடிக்கக்கூடாது. வெயிலில் நிற்கவைத்தல், முதுகில் செங்கலை சுமக்க வைத்தல், தலையில் குட்டுதல் உள்ளிட்ட எந்த ஒரு தண்டனையையும் கொடுக்கக்கூடாது.

பள்ளியில் உள்ள வேலைகளை மாணவர்களை கொண்டு செய்யக்கூடாது. மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வாங்கக்கூடாது. அது குற்றமாகும். மேலும் மாற்று சான்றிதழ் கொடுக்கும்போதும் பணம் வாங்கக்கூடாது. பள்ளிகளில் மேற்கண்ட எந்த குற்றமாவது நடக்கிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை

திருச்சியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலித்ததால், அதே போல எந்த பள்ளியிலும் வசூலிக்கக்கூடாது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

No comments: