.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, February 23, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆஸ்கார் மேடையில் தமிழில் புகழ்ந்த ரஹ்மான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஆஸ்கார் மேடையில் தமிழில் இறைவனைப்புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்.
லாஸ் ஏன்ஜெல்ஸ் 23-02-2009: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.


ஸ்லம்டாக் மில்லியனர் (சேரிநாய் கோடிஸ்வரன்) படத்தில் மிகச் சிறந்த இசையமைப்பிற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இந்தியர் என்ற மகிழ்வில் நாமும் அவரை வாழ்த்துகிறோம்!

ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் திரையரங்கில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

விருதைப் பெற்ற பின் ரஹ்மான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தனது சிந்தனை மொழியான தாய் மொழி தமிழில் பேசி தன் இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ளார். உளப்பூர்வமான நன்றி அது.

2 ஆஸ்கார் விருதுகள் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்துள்ள தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் எத்தனை படங்களில் இசை அமைத்துள்ளார் என்று பார்ப்பதை விட எத்தனை விருதுகள் பெற்றுள்ளார் என்று பார்ப்போம்.

அவரைப் பற்றியும் அவரது விருதுகள் பற்றியும் ஒரு சிறிய அலசல்.

தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய கஷ்டமான நிலை.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான்.

இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக மாறினார் ரஹ்மான். தனது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார்.

கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார்.

ஆனால் சிந்தசைசரில்தான் அவருக்கு அதிக பிரியம். இசையையும், தொழில்நுட்பத்தையும் சரியான கலவையில் இணைக்கும் கருவி என்பதால் சிந்தசைசரில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார்.

பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.

எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார்.

இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

1992ம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை தொடங்கினார் ரஹ்மான். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது.

இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் தொடங்கிய பின்னர் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.

சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.

அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு நம்ம ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமே.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார்.

இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.

அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான்.

குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிப் போனார் ரஹ்மான்.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் படைத்துள்ளார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான்.

2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான்.

இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 3 வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான்.

2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அல்வா சாப்பிடுவது போல.

ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை இசைப்பிரியர்கள் யாரும் மறுக்க முடியாது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது.
அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.
ரஹ்மானின் முதல் படங்கள் ...

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது.

இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.

மலையாளத்தில் முதல் படம் யோதா.

தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ்.

ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகள் ...

எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதை விட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான்.

அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கல்விக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்


ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது


தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)

இதோ இப்போது பெற்றுள்ளவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்...

வாழ்த்துக்கள் சகோதரா!
Thanks to thatstamiloneindia.in

2 comments:

அலாவுதீன்.S. said...

ஏகஇறைவனின் திருப்பெயரால்...



எங்கே செல்லும் இந்தப் பாதை ???



ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.



பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.



முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.



அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ?

இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !



இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.



என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590



அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருது பெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை நமக்குப் பெருமையா ?



நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.



உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)



அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?



சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.



ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.



பாடலில் வரக் கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,



வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.



அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )



வீடு, ரோடு, கக்கூஸ் என்று கண்ட இடங்களிலும், கண்ட நேரங்களிலும் இமேஜைப் பற்றி அறவே சிந்திக்காமல் வாய்விட்டுப் பாடுவதற்கு மூளையை ஆக்ரமித்து சிந்தனைத் திறனை செயலிழக்கச் செய்வதில் திரைப்பட இசைக்குப் பெரும் பங்கு உண்டு.



ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சீரழிக்கக் கூடிய சினிமாவில் இசை பெரும் பங்கு வகிப்பதால் நம்மால் அதை எதிர்க்க முடியவில்லை என்றாலும் மௌணமாக இருந்து விடலாம் அதை விட்டு தீமைக்குப் துணைப் போகலாமா ? (ஆதரிக்கலாமா) அதுவும் அல்லாஹ்வின் தூதருடைய சங்கைக்குரிய அடையாளத்தை முகத்தில் வைத்துக்கொண்டு.



அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள்இ 'இவர்இ தமது கடமையை நிறைவேற்றிவிட்டார். 'உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்' என்றார். அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லீம்





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ



நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104



அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Anonymous said...

அருமையான் பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.