.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, July 22, 2010

கொலைக் களங்களாக மாறிவரும் பள்ளிக்கூடங்கள்!

அபினாவுக்கு 10 வயது. அப்பாவி கிராமத்துப் பிள்ளை. கூலி வேலை பார்க்கும் அடிமட்டத் தொழிலாளிக் குடும்பத்தில் இருந்து முதல் தலை முறையாகப் பள்ளிக்கூடம் போகும் சிறுமி. கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் அருகே தோட்டம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவியான அபினா, வழக்கம்போல அன்றைக்கும் பள்ளிக்குப் போனாள்.

தமிழ்ப் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியை, 'ஊஞ்சல்' என்ற வார்த்தையைக் கரும்பலகையில் எழுதிப்போட்டு, அதை ஒவ்வொருவராக வாசிக்கச் சொன்னார். எல்லோரும் வாசித்தனர். இப்போது அபினாவின் முறை. அவளால் ஊஞ்சல் என்று சொல்ல முடியவில்லை. குரல் குழறியது. 'ஊஞ்ச்சல்' எனத் தவறாக உச்சரித்தாள். கோபம் அடைந்த ஆசிரியை திரும்பத் திரும்ப 'ஊஞ்சல்' என்று உச்சரிக்கச் சொன்னார். ஏனோ, அபினாவால் முடியவே இல்லை. தவறாகவே உச்சரித்தாள்.

இதனால் கோபம் அடைந்த ஆசிரியை, "ஊஞ்சல்னு எழுதிப் போட்டதைக்கூட வாசிக்கத் தெரியலை. உனக்கு எல்லாம் எதுக்கு அஞ்சாங்கிளாஸ்? போய் ஒண்ணாங்கிளாஸ்ல படி!"என்றிருக்கிறார் கடுப்பாக.

சக மாணவ, மாணவிகள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். தமிழ் வகுப்பு முற்றுப் பெற்றது. ஆனால், அபினாவின் மன வேதனைக்கு முற்றுப்புள்ளி விழ வில்லை. அன்று முழுவதும் வகுப்பறையில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். வீட்டுக்குப் போனபிறகும் வகுப்பறையில் நிகழ்ந்த அவமானம் அவள் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நொடியில் திடீரென முடிவு எடுத்து கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டாள்.

உடம்பை தீ சுட்டுப் பொசுக்க, அவள் பெருங்குரலில் அலறினாள். ஆனால், அபினாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. 10 வயது பிஞ்சுப் பெண்ணின் தேகம் முழுக்கக் கரிக்கட்டையாகத் தீய்ந்து எரிந்து சரிந்தது.

இந்தக் கொடூரமான கல்வி முறை அபினாவின் உயிரைப் பலியெடுத்தது. விஷயம் அறிந்து அபினாவின் ஊராகிய நத்தம் பட்டு காலனி மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். பள்ளிக்கூடம் சென்று நியாயம் கேட்டார்கள். காவலர்களும் ஓடிவந்து விசாரணை நடத்தினார்கள். முதலில் 'அந்த டீச்சர் சொன்னதுதான் காரணம்' என்றது போலீஸ். ஆனால், வழக்குப் பதிவு மட்டும் வழக்கமான பதிவாகவே இருந்தது... 'தீராத வயிற்று வலி'யின் காரணமாக அபினா தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக!

பள்ளிக்கூடம் 'கொள்ளி'க்கூடமாகும் கொடுமை புதிது இல்லை. அண்மையில் வேலூர், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில், கீர்த்தனா என்ற மாணவி இறந்துபோனாள். ஸ்பெஷல் கிளாஸுக் குச் செல்லவில்லை என்று பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துக் கொடுமைப்படுத்தப் பட்டதால்தான் அவள் செத்தாள் என்று புகார் எழுந்தது. மணப்பாறை புனித மரியன்னை துவக்கப் பள்ளியில் ஸ்ரீரோகிணி என்ற மாணவி இறந்ததற்குக் காரணம் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததுதான் என்றும், அதை மறைக்க ஸ்ரீரோகிணியின் உடலை தண்ணீர்த் தொட்டியில் வீசிவிட்டனர் என்றும் கடும் புகார்கள் கிளம்பின.

இப்படி படிக்கச் செல்லும் பிஞ்சுகளைச் சித்ரவதை செய்து கொலை செய்யும் கொலைக் களங்களாக பள்ளிக்கூடங்கள் இருந்தால் எந்த நம்பிக்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது?

மிதித்து ஆசிர்வதிக்கும் சாமியார்!


சர்ச்சைகளுக்கும் சாமியார் களுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ..... பீர் குடித்து மப்பில் அருள்வாக்கு சொல்வது, கெட்ட வார்த்தைகளாலேயே பக்தர்களுக்குக் குறி சொல்வது என்ற விநோத சாமியார்களின் வரிசையில், கடந்த வாரம் நமது ஆக்ஷன் செல்லில் (044---42890005) பதிவாகி இருந்த ஒரு சாமியார் சமாசாரம் இது!

''ஹலோ... சார், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் 'சாக்லேட் சாமி'னு ஒருத்தர் அருள்வாக்கு சொல்றார். 'அம்மன் அவதாரமே நான்தான்'னு சொல்லிட்டு இவர் பண்ற சேட்டைகள் தாங்கலை. பெண் பக்தைகளுக்கு தன் கையாலேயே தலையில் பூ, நெத்தியில் குங்குமம் வெச்சுவிடுறதோட... வாயிலே சாக்லெட்டையும் திணிச்சு அனுப்புறார். எல்லாத்துக்கும் உச்ச கட்டமா பக்தர்கள் முதுகில் தன் கால்களால் ஒரு மிதி மிதிச்சு ஸ்பெஷல் ஆசீர்வாதமும்(!) பண்ணித் தொலைக்கிறார்!'' என்று அதிரவைத்தது ஒரு பெண் குரல்!


வீடியோ நன்றி ஜூவி.

'அடடே... இப்படியும் ஓர் பக்தியானந்தாவா?!' என்று 'சாக்லேட் சாமி'க்கு தரிசனம் கொடுக்க (என்னவொரு மெதப்பு!) கிளம்பினோம். கபாலீஸ்வரர் கோயிலுக்கும் சித்திரக் குளத்துக்கும் இடைப்பட்ட வீதி ஒன்றின் மாடி வீடுதான் (ஆ)சாமியின் ஆசிரமம். இரவு 8.30 மணிக்குமேல்தான் பக்தர்கள் சந்திப்பு. வாசலில் பூ விற்கும் பாட்டி, ''சாமி கால் நம்ம உடம்பில் படுறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும்... இந்தா பூ வாங்கிட்டுப்போய் சாமிய பாருய்யா...'' என்று கூவிக்கொண்டு இருந்தார்!

வரிசையாக ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒட்டப்பட்டு (அதாவது, இங்கே வந்து போனாலே ஐஸ்வர்யம் கொட்டுமாம்!) இருந்த மாடிப்படிகளைக் கடந்து சந்நிதானம்(!) சென்றோம். ஆங்காங்கே ஐந்து தலை நாகம், அசுரர் முகங்கள்கொண்ட பயமுறுத் தும் சிலைகளைத் தாண்டிச் சென்றால்... 'பளிச்' மூக்குத்தியோடு கருவறைக்குள் அம்மன் சிலை! சுவர் எங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் ஆன்மிகத் தத்துவ நோட்டீஸ்களுக்கு மத்தியில்... 'சாக்லெட் பெருமை' பேசும் பிட் நோட்டீஸ்களும் அடக்கம். மல்லிகைப் பூ, கலர் கலர் சாக்லெட் பாக்கெட்டுகளோடு சாமியின் தரிசனத்துக்கு காத்துக்கிடந்த பக்தர் ஒருவரிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்.

''நானும் என் பொஞ்சாதியும் ரெண்டு மாசமாத்தான் சாமியைக் கும்புட வர்றோம். சாமி பேர் வெங்கட்ரமணா. பாரீஸில் (அட, பாரீஸ் கார்னர்!) இருக்குற ஒரு தேசிய வங்கியிலதான் வேலை பார்க்கிறார். பகலில் பேங்க் வேலை; ராத்திரியில் மட்டும் பூஜை. வெள்ளி, செவ்வாய் மாதிரி விசேஷ நாட்களில் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட பூஜை நடக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் 'சாமியோட காலால் ஒரே ஒரு மிதி வாங்கிட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோடதான் வர்றோம் (எல்லாம் இந்த நாட்டைப் புடிச்ச கெரகம்!). இந்த முறை நிச்சயம் எனக்கு சாமி கருணை காட்டும்...'' என்று காத்துக்கிடந்தார் அந்த அப்புராணி பக்தர்.

சிறிது நேரத்திலேயே 'ஜல்ஜல்'லென்ற கொலுசு ஒலியோடு கம்பீரமாக அறைக்குள் நடந்து வந்தார் 'சாக்லெட் சாமி' என்ற 'அம்மன் சாமி!' காதில் வளையக் கம்மல், காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி.... என்று விநோத வில்லனுக்குத் தேவையான கெட்-அப்பில் ஆஜரானவர், அம்மன் சிலை அருகில் உள்ள சொகுசு நாற்காலிக்குள் உடம்பைப் புதைத்துக்கொண்டார்.

தளும்பி நிற்கும் தீர்த்தம் (தப்பா யோசிக்கப்படாது!), குவித்துவைக்கப்பட்ட குங்குமம், விதம்விதமான சாக்லெட் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து எதையோ மென்றுகொண்டே ஜரூராக அருள் வாக்குக்கு சைகை காட்டினார்.

அவ்வளவுதான்... 'ஆசீர்வாத மிதி' வாங்கக் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாண் கிடையாகத் தொப்பென்று சாமியின் பாதத்தில் விழுந்து வணங்கு கிறது கூட்டம். பக்தியின் உச்சத்தில், சிலர் சாமியின் பாதங்களைத் தொட்டு... முத்தமிட்டு உருகுவதோடு, 'சாமியின் காலால் மிதி வாங்காமல் எழும்பவே மாட் டேன்!' என்ற பிடிவாதத்துடன் படுத்த நிலையிலேயே நேரம் கடத்துகின்றனர். இன்னும் சிலர், கீழே கிடக்கும் பூச்சிதறல்களை சுத்தம் செய்யும் சாக்கில் 'மிதி' வாங்க 'விடா முயற்சி' செய்கின்றனர்!

பெண் பக்தைகளும்கூட சாஷ்டாங்கமாக சாமியின் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தயக்கமும் இன்றி பாந்த மாக மல்லிகைப் பூவைச் சூடி அழகு பார்க்கிறார் சாக்லெட் சாமி. உச்சி குளிர்ந்து நிற்கும் அந்தப் பெண் பக்தைகளின் நெற்றியில் அடுத்த கட்டமாக உரிமையோடு குங்குமத் திலகமும் இடுகிறார். கூடவே, மறக்காமல் அவர்களது தாலியை தன் கைகளுக்குள் பொத்தி அழுத்தியவாறு சில நொடிகள் முணு முணுக்கிறார் சாமி! இது தவிர, சொந்த வாழ்க்கைக் குறையைச் சொல்லி அழும் சில பெண் பக்தைகளின் வாய்க்குள் சட்டென்று ஓர் ஒற்றைச் சாக்லெட்டைப் பிரித்துத் திணிக்கிறார். கசப்புகள் கரைந்து இனிப்பாகிவிடுமாம்! அத்தனையையும் பக்கத்தில் இருந்து பார்த்து பூரிப்போடு பரவசமாகிறார்கள் அவரவர் கணவன்மார்கள்!

பக்தர்கள் எல்லோருக்கும் 'கால் மிதி' பாக்கியம் கிடைத்துவிடாது. அதற்கும் ஒரு முதுகு யோகம் வேண்டும். தம்பதி சகிதமாக வந்து விழுந்து வணங்கிக்கொண்டு இருந்தவர்களில், ஓர் ஆண் பக்தரின் முதுகில் திடீரென தனது இரு கால்களையும் படாரென்று தூக்கி மிதித்து சாமி 'ஆசீர்வாதம்' செய்ததில், பதறிபோனோம். மிதி வாங்கிய வலி நமக்குப் புரியவில்லை. அடுத்தடுத்து மிதி வாங்கும் ஆவலோடு கூட்டமும் முண்டியடித்துத் திணறியது.

'கடவுள்களின் உணவான சாக்லெட்டை(?) சாப்பிட்டால் முதுமையைத் தடுக்கலாம்!' என்ற 'பிராண்ட் நியூ' தத்துவத்தை விளக்கிச் சொல்கிறது பிட் நோட்டீஸ் ஒன்று. ஊருக்கே சாக்லெட் கொடுக்கும் சாமியோ தனது முதுமையை மறைக்க தலைமுடி, தாடிக்கு பளிச்சென்று 'டை' பூசி இளமையைக் காப்பாற்றுகிறார். நமது முறை வந்ததும் சாமியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச எத்தனித்தோம். சட்டென்று டென்ஷனாகி, ''ஆன்மிகத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜூ.வி-யில் என்ன பக்தியைப் பற்றியா எழுதறீங்க...?'' என்று திடீர் 'அருள்' வந்து ஆட ஆரம்பித்தார். ரொம்ப நேரம் கழித்து சமாதானமாகிப் பேச ஆரம்பித்தார்.

''இந்த அம்மன் வழிபாட்டை 26 வருஷமா செய்துட்டு வர்றேன். இதுவரையிலும் எந்தக் கெட்ட பெயரும் எனக்குக் கிடையாது. ஒரு மனுஷாளைப் பாத்த மாத்திரத்திலேயே இவர் டாக்டர், இன்ஜீனீயர்னு யாராலும் சொல்லிட முடியுமா? உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்டே போறோம். அவர் ஆம்பளை டாக்டரா... பொம்பளை டாக்டரான்னு பார்த்துக்கிட்டாப் போறோம்? யாராயிருந்தா என்ன... நமக்கு உடம்பு சரியானாப் போதும்னு நினைச்சு சிகிச்சை எடுக்குறோம்! அதே மாதிரிதான் என்னை நம்பி நிறைய பேர் பிரச்னைகளோட வர்றாங்க. அம்மன் கருணையால் அவங்களுக்கு பூ, பொட்டு வெச்சு ஆசீர்வாதம் கொடுக்குறேன். எல்லாம் சுபமாகிடுது. இதெல்லாமே ஒரு ஹீலிங் தெரபிதான்!'' என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார்.

நன்றி: ஜூவி.

- த.கதிரவன்
படம்: என்.விவேக்

அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களை சிதைக்கும் மனித மிருகங்கள்

அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களுக்கு நேரும் கும்பாவுருட்டி குரூரம்

ஆடையை அவிழ்த்து... அம்மணமாக நிற்கவைத்து...

''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''

''ஐயோ வேணாம் சாமீ...''

''ஏய், விடுடி... துணியை விடுடி...''

''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''

''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர் வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களை யும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் 'அன்வேஷணம்' (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட... விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண் களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்...'' என கொதித்தார்.

அந்த வக்கிர கும்பலின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட செங்கோட்டைவாசி ஒருவர், ''ரெண்டு மாசம் முந்தி என் மனைவியுடன் கும்பாவுருட்டி அருவிக்குப் போனேன். அப்ப 'வன சம்ரக்ஷண சமிதி' உறுப்பினர்கள் எங்களைப் பார்த்த பார்வையே சரியில்லை. அங்கிருந்து நாங்கள் காட்டுக்குள் நடந்து போகும்போது பின்னாலேயே வந்த வர்கள் என்னை மிரட்டி, 'இவ யாரு? தமிழ்நாட்டில் இருந்து தள்ளிட்டு வந்துருக்கியா?'ன்னு அசிங்கமா கேட்டாங்க. 'இவ என் மனைவி'ன்னு சொன்னதும், ஒருத்தன் என் கன்னத்தில் 'பளார்'னு அடிச்சான். இன்னொருத்தன் என் மனைவியின் சேலையைப் பிடிச்சு இழுக்க... நாங்க ரெண்டு பேரும் கதறினோம். நல்லவேளையா, அந்த சமயத்தில் நாலஞ்சு தமிழ் ஆட்கள் அருவியில் குளிக்கறதுக்காக, தூரத்தில் வந்ததால், எங்களை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. தப்பிச்சோம், பொழைச்சோம்னு உடனே கிளம்பிட்டோம். இது பத்தி தென்மலை போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க அதை வாங்கலை. கோர்ட், கேஸ்னு அலையணுமேன்னு அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டோம்...'' என்றார், இன்னும்கூட அதிர்ச்சி விலகாமல்.

அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை...'' என்று ஆதங்கப்பட்டார்.

கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ''கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!'' என்று உறுதி கொடுத்தார்.

'வனத் துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!

நன்றி: ஜூவி.

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

Saturday, July 3, 2010

சவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.

மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.

தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.

ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.

நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.

வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.

“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.

தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tuesday, June 22, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு கோவை நோக்கி வருக-கருணாநிதி அழைப்பு


சென்னை: நமது தமிழ் மொழிக்கு சிறப்புகள் சேர்க்க, தமிழ் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்ம படைத்திட வழிவகை காண்போம்! கோவை மாநகர் நோக்கி வருக வருக என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

கோவையில் நாளை தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் ஆற்றிய உரை:

கொங்கு சீமையிலே-கோவை மாநகரில் எங்கும் எழில் குலுங்கிட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நாளை (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.

இதுவரையில் எட்டு உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த மாநாடு- அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறுகிற மாநாடாகும்!

அதாவது, தமிழ், `செம்மொழி' என மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டபின் நடைபெறுகிற முதல் மாநாடு இது!

உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ள எனக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அவற்றுள் கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஈப்ரு, சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே, செம்மொழி எனும் தகுதியை பெற்றுள்ளன என மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இந்த வரிசையில் இன்று தமிழ் மொழி `செம்மொழி' எனும் சிறப்பைப் பெற்று; நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது.

தமிழ் மற்ற செம்மொழிகளை விடவும் மேலானதாகும். இதற்கு பல சான்றுகள் உள்ளன.

செம்மொழிகளில் லத்தீன், ஈப்ரு ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை.

கிரீக் மொழி இடையில் நசிந்துவிட்ட போதிலும், தற்பொழுதுதான் அது மேலும் வளமடைந்து வருகிறது.

சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கிலே இல்லை; சீனமொழி பட எழுத்து முறையில் உள்ளதால், அம்மொழியால் உள்ளத்து உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த இயலாது என மொழியியலார் கூறுகின்றார்கள்.

அரேபிய மொழி காலத்தால் மிகவும் பிந்தியது; பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது; இந்த செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும்போது, தமிழ் மொழி-மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும்விட உயர் தனி சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி''
தமிழ்க்குடி என- தமிழ்ச் சமுதாயத்தின்
தொன்மை- பழைமை கூறப்படுகிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்,

"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்''- என்று பாடி- தமிழும், தமிழர் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார்.

இலக்கிய வளத்தை பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறவுபடாத- தொடர்ச்சியான இலக்கிங்களை கொண்டுள்ளது தமிழ் மொழி!

இலக்கணத்தை பொறுத்தவரை, "தொல்காப்பியம்'' மிகச்சிறந்த இலக்கண நூலாக

எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம்
பொருளதிகாரம்
-என மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. எல்லா மொழிகளிலும் எழுத்துக்களும், சொல்லுக்கும்தான் இலக்கணம் உண்டு.

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கைக்கு அகம்-புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது உலக மொழிகளிலேயே தமிழ் மொழி ஒன்றுதான்!

இது நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப்பெரும் சிறப்பாகும்.

தமிழ் மொழி எந்த ஒரு மொழியையும் சார்ந்திருக்கவில்லை; இது, தனித்தன்மை வாய்ந்த மொழி.

தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன.

இந்த திராவிட மொழிகளுக்கெல்லாம்- மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.

இதனை நமக்கும், உலகத்திற்கும் எடுத்துச் சொன்னவர் டாக்டர் கால்டுவெல். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ள, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்னும் நூல் இந்த உண்மையை நமக்கு உரைக்கிறது.

தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை தரும் சங்க இலக்கியங்கள் உலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும் பிற அற மாண்புகளையும் உரைக்கின்றன.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்''
"தீதும் நன்றும் பிறர்தர வாரா''
"வினையே ஆடவர்க்கு உயிரே''

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே''

"செல்வத்துப் பயனே ஈதல்''

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை''

"ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று''

போன்ற அரிய மணிவாசகங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளை வலியுறுத்துகின்றன.

அப்படி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பை சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்பொழுதுதான், 2004-ம் ஆண்டில்தான்- அதுவும், மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர்தான் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த பெருமையை கொண்டாடிடும் வகையில்தான் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது!

இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தருகிறார்கள்!

குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறை தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் வருகிறார்.

அவர், எல்லா தகுதிகளையும் கொண்டுள்ள தமிழ் இதுவரை, "செம்மொழி'' என அங்கீகரிக்கப்படவில்லையா? எனக் கேட்டு வருந்தி கொண்டிருந்தவர்.

அதேபோல, பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா என்னும் பேரறிஞர் வருகிறார். அவர், தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரீகத்தையும், அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரீகத்தை சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை பெறவிருக்கிறார்.

இவர்களைப்போல உலகெங்கும் 49 அயல்நாடுகளிலிருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டிலே பங்கு பெறுகிறார்கள்.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர்.

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நாளை காலையில் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும், பிற சான்றோர்களும் பங்கு பெறுகிறார்கள்.

மாலையில் தமிழின் மாண்பை விளக்கும் 40 அலங்கார ஊர்திகள் அணிவகுத்திட- ஏறத்தாழ 2 ஆயிரம் கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை படைத்திட 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு- "இனியவை நாற்பது'' எனும் வண்ணமிகு அலங்கார பேரணி நடைபெறுகிறது.

பின்னர், 24-ந் தேதி காலை முதல் 27-ந் தேதி மாலை வரை ஆய்வரங்குகள் நடைபெறுகின்றன.

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்பதை உணர்த்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கருத்தரங்கம் 25-ந் தேதி அன்று நடைபெறுகிறது.

செம்மொழித் தமிழின் மாண்பை பாடிடும் செந்தமிழ் நாட்டு கலை, பண்பாட்டு சிறப்புகளையும் புலப்படுத்திடும் அரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாட்களில் வெளிநாட்டு பார்வையாளர்களும், தமிழ் மக்களும் கண்டுகளிப்பெய்திடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டில் பங்கு பெற வருவோர் வந்து செல்ல வசதியாக- கோவை மாநகருக்கு பல்வேறு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மத்திய நிதி அமைசத்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில், மாநாடு நிறைவு விழா உரையினை நான் ஆற்றவுள்ளேன்.

தமிழ் மொழி வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை உருவாக்கிடும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நினைவாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுகிறார்.

நமது அன்னைத்தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்திட, தமிழின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள- வாழையடி வாழையாம் வருங்கால தமிழின மக்களுக்கு தங்கத் தமிழின் அறிவு செல்வத்தை செறிவுடன் தந்திட- கோவையில் கூடுகிறது- உலகத்தமிழ் செம்மொழி மாநாடு- உலகத்தகவல் தொழில் நுட்பவியல் மாநாடு!

அனைவரும் வருக, வருக

எனவே, அருமைத்தமிழக மக்களே!

நமது தமிழ் மொழிக்கு சிறப்புகள் சேர்க்க, தமிழ் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்ம படைத்திட வழிவகை காண்போம்!

கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் என்றார் கருணாநிதி.
நன்றி :தட்ஸ்தமிழ்

600 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க... தமுமுக கோரிக்கை


தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை ஐந்து நாட்கள் கோவையில் நடைபெற உள்ள நிலையில் மிகமுக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைக்கின்றோம்.

தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

1968ல் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டார்கள்.

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 51 முஸ்லிம் கைதிகள் உட்பட 600 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

அரசு சார்பில் விமர்சையோடு நடைபெறும் செம்மொழி மாநாட்டு மூலமாக இவர்கள் விடுதலையானால், மனிதநேயம் கொண்டோர் அனைவரும் தமிழக முதல்வரை வாழ்த்துவார்கள் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.

செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் இனிதே நிறைவுபெற வாழ்த்துகிறோம்


பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய், என்றைக்கும் சீரிளமையாய் இருந்து வரும் தமிழ் மொழி, மத்திய அரசால் செம்மொழியென அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக தமிழக அரசின் சார்பில், ஒரு பெருவிழாவாக, கோவையில் நாளை (ஜூன் 23) முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக, உலகத் தமிழர்கள் ஒன்றினையும் விழாவாக நடைபெறவுள்ளது.

மாநாட்டில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 48 நாடுகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர்.

சங்ககாலத் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலான காட்சிகள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் ஒருபுறத்தில் 21 ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் நிகழ்வும், மறுபுறத்தில் தமிழறிஞர்களின் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுவதுடன், 2,000-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

கன்னித் தமிழை, இளமை குன்றா இனிய தமிழை இன்னும் முன்னெடுக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மேன்மையடைய வேண்டும், தொன்மை மொழிக்குச் சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்நாட்டில் பிற மொழி மோகத்தில் உள்ளவர்களுக்கு தாய்மொழி உணர்வை, மொழிப்பற்றை வளர்க்க வேண்டும், தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்களின் படைப்புகளை மக்கள் களத்துக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வருங்கால இளைய சமுதாயம் தமிழின் மேன்மையையும், பெருமையையும் உணர வேண்டுமென்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.

மாநாட்டுக்கு வெளியே நடைபெறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் இவை மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்றாலும், மாநாட்டில் நிகழும் ஆய்வரங்கக் கட்டுரைகள்தான் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுவதுடன், தமிழுக்கும் பெருமை சேர்க்கும்.

மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவராலும் எல்லா ஆய்வரங்குக்கும் செல்வது என்பது முடியாத ஒன்று.

மாநாட்டில் பங்கேற்க நினைத்து பங்கேற்க முடியாதவர்களும், மாநாட்டில் பங்கேற்று அனைத்து ஆய்வரங்குகளிலும் பங்கேற்காதவர்களும் மாநாட்டின் முழுப் பயனைப் பெற வேண்டும். அந்த வகையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டுமென்று மாநாட்டுப் பணிகள், மிக விரைவாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது அதே வேகத்தில் ஆய்வுக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட்டு, செம்மொழி மாநாட்டின் முழுப்பயனை அனைவரும் பெறச் செய்ய வேண்டும்.

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற வள்ளுவரின் வாக்கினைப் போல, நாம் எழுதியவைகள் தம் கைகளில் கிடைத்த மகிழ்ச்சியை நம் தமிழர் பெருமக்கள் அடைவர்.

உலகின் பல்வேறு துருவங்களிலிருந்து வந்து உயர்தனிச் செம்மொழியான தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று, எண்ணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் தமிழ்ச் சான்றோர்களை பெருமைப்படுத்துவது தமிழையும், தமிழர்களையும் பெருமைப்படுத்துவதாகும்.

அதேநேரத்தில், தமிழ் உலக அரங்கில் செம்மொழியாக பேசப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் சிந்தித்தவர்களையும் இந்த மாநாட்டில் பெருமைப்படுத்த வேண்டும்.

வாய் மூலம், எழுத்து மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்த வேண்டும். மறைந்தவர்களைக் கௌரவிக்கும்பட்சத்தில் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியடையும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கௌரவிக்கும்பட்சத்தில் தன்னுடைய தமிழ் உணர்வுக்குக் கிடைத்த அங்கீகாரமென நினைத்து பெருமிதம் கொள்ளவும், மேலும் தமிழுக்காகப் பணியாற்றவும் ஊக்குவிக்கும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் இனிதே நிறைவுபெற நீதியின் குரல் சார்பாக வாழ்த்துகிறோம்.

Monday, June 21, 2010

கட்டப்பஞ்சாயத்துக் கொடூரங்கள்!

'கட்டப்பஞ்சாயத்து செய்வோரைச் சட்டம் இரும்புக் கரம்கொண்டு அடக்கும்' என்று அவ்வப்போது அரசாங்கம் குரல் கொடுக்கும். ஆனால், அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கும்?

கட்டப்பஞ்சாயத்துகள்பற்றி விரிவான ஆய்வு நடத்தி ஆதாரங்களைத் திரட்டி இருக்கும் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிரைச் சந்தித்தோம். அவர் அடுக்கிய விவரங்கள் எல்லாம், இதுவரை வெளியானதைவிடவும் கூடுதல் பகீர்தான்!

'மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 167 கிராமங்களில் ஆய்வு செய்தோம். அதில், 94 கிராமங்களில் சாதி வித்தி யாசமின்றி ஒரே பஞ்சாயத்து முறையும், மற்ற கிராமங்களில், சாதிக்கு ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடாவடித் தீர்ப்புகள் சொல்லப்படும் இந்தப் பஞ்சாயத் துகளில், பெண்களுக்காகப் பேசுவதற்கோ, கருத்து சொல்வதற்கோ உரிமை கிடையாது. இவர்கள் வழங்கும் தண்டனைகளும் வேடிக்கை, வேதனை!

பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக 88 கிராமங்களில் பஞ்சாயத்து கூடித்தான் தீர்ப்பு சொல் கிறார்கள். இதில் 12 கிராமங்களில்பெண்ணைக் கெடுத்தவனை ஊர்க் கூட்டத்தில் காலில் விழச் சொல் கிறார்கள். 50 கிராமங்களில் வெறுமனே அபராதம் மட்டும்தான். பலாத்காரம் செய்யப்பட்டவர் திருமணமாகாத இளம்பெண் என்றால், கெடுத்தவனே அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காட்டுமிரண்டித்தனமான தீர்ப்புகள், 35 கிராமங்களில் வழங்கப்படுகின்றன. இந்த தீர்ப்பு உயர் சாதிக்காரனுக்கு மட்டும்தான். இதுவே தலித் இளைஞன் ஒருவன் மேல்சாதிப் பெண்ணைக் கெடுத்துவிட்டால், கடுமையான தண்டனையும் போலீஸ் நடவடிக்கையும் நிச்சயம் உண்டு!

விவாகரத்துப் பிரச்னைகள் இந்தக் கட்டப்பஞ்சாயத்தில் நொடியில் தீர்க்கப்படுகின்றன. வேடசந்தூர்ப் பகுதியில் சாதி இந்துப் பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்தார். இதற்காக ஒரு மாதம் கழித்து, அவர்களைப் பிடித்து கிடா வெட்டி, அதன் ரத்தத்தை இருவரின் தலையிலும் தேய்த்து, இருவரையும் பிரித்துவிட்டார்கள். தற்போது, அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்துவிட்டனர். இப்படி, சடங்குத்தனமான தண்டனைகள் இன்னும் உண்டு... ஊர்க் கூட்டத்தில் வைத்து உலக்கையைத் தாண்டினாலோ, இரு வீட்டுக் கூரையையும் எடுத்து வந்து முறித்துப் போட்டாலோ போதும், அவர் கள் விவா கரத்து ஆனதாக அர்த்தமாம்!

இவைபோன்ற சாதிப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் பஞ்சாயத்து களை எதிர்த்து, போலீஸுக்குப் போகிற வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, 167 கிராமங்களில் இதுவரை இவர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை வெறும் 18-தான். அதிலும் 10 புகார்களே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆறு வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை நடந் துள்ளது!'' என்றார்.

''இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?''

'ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து முறை உள்ளதா என்று ஆய்வு நடத்தி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதனை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு தாலுக்காவிலும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். கட்டப்பஞ்சாயத்துப் புகார்களுக்கான நடவடிக் கைக்காகவே மாவட்டத்துக்கு ஒரு சிறப்புக் காவல் நிலையம் தொடங்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பில் ஈடுபடுகிற கட்டப்பஞ்சாயத்துக் குழுக்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை தங்களது சொந்தக் கிராமத்துக்கு வர முடியாத அளவுக்குக் கடுமையான உத்தரவுகளை வெளியிட வேண்டும்!'' என்றார் கதிர்.

கற்பக விநாயகம் போன்ற எத்தனை நீதிபதிகள் கடுமையாக உத்தரவிட்டாலும், கட்டப்பஞ்சாயத்துகளின் வீரியம், வீறிடவைத்துக்கொண்டேதான் இருக்குமா?
நன்றி: ஜூவி

Sunday, June 20, 2010

தமுமுக கோரிக்கையை ஏற்று தமிழ் இணைய மாநாட்டின் அரங்கிற்கு யூனிக்கோட் உமர் தம்பியின் பெயர் சூட்டல்

தமிழக முதல்வர் கலைஞருக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கணினி தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடந்த 10.05.2010 அன்று கடிதம் எழுதினார். தமுமுகவின் கோரிக்கையை தமிழ் இணைய மாநாட்டு அரங்கு ஒன்றிற்கு உமர் தம்பியின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இதர அரங்குகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், எழுத்தாளர் சுஜாதா, சிங்கப்பூர் கோவிந்தசாமி, யாழன் சண்முக லிங்கம் ஆகியோர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

-நன்றி











Thursday, June 17, 2010

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள்!

வட அமெரிக்காவின் லூஸியானா மாகாணக் கடற்கரை...

- ஷங்கர்
அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்!

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன...

இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது.

'9/11யைஐ விட படு மோசமான வர்த்தக தீவிரவாதம்' என நடுநிலையாளர்களும் அமெரிக்கர்களும் மனம் வெறுத்துக் கூறும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக்கிறது. ஆனால், இன்னும் நடவடிக்கை தீவிர ஏதும் எடுத்தபாடில்லை...

அப்படி என்னதான் நடந்தது?:

மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, அதாவது இரு மாதங்களுக்கு முன் இந்த எண்ணெய் கிணற்றின் முக்கிய இரும்புக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது. 11 தொழிலாளர்களும் இறந்தனர். ஆனால், அதை அப்படியே வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்.

அதற்குள் பல மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.47 மில்லியன் காலன் முதல் 2.52 மில்லியன் காலன் வரையிலான (1 காலன் = 3.8 லிட்டர்) எண்ணெய் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி இன்று வரை எத்தனை மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்திருக்கும் என்பதை ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள்...

விஷயம் வெளியில் தெரிந்து பெருமளவு விமர்சனங்கள் எழுந்த பிறகே அமெரிக்க அரசு தலையிட்டது. உடனே அடுத்த 24 மணி நேரத்தில், குழாய் வெடிப்பின் மீது ஒரு தொப்பி போல அமைத்து எண்ணெய் பீச்சிடுவதை நிறுத்தப் போவதாகக் கூறியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். ஆனால், அதெல்லாம் ஒருசில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்னும் வேகமாக கச்சா எண்ணெய் பீய்ச்சிக் கொண்டு வெளியேறியபடி இருக்கிறது.

இந்த நிமிடம் வரை எண்ணெய் கசிவு நிறுத்தப்படவே இல்லை. இன்றைய நிலவரப்படி, கடலில் கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான அடர்த்தியில் (density) கச்சா எண்ணெய் கலந்து நிற்கிறது.

அமெரிக்காவின் மூன்று பெரிய மாகாணங்களின் மொத்த பரப்பளவுக்கு (area) இணையான அளவு கடலில் எண்ணெய் தேங்கி நிற்கிறது. ஆனால் இதனை அப்படியே மூடி மறைத்தன பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள். ஒருநாளைக்கு 5,000 பேரல்கள்தான் கசிவதாக பிரிட்டனும், இல்லையில்லை 12,000 முதல் 20,000 லிட்டர்தான் என அமெரிக்காவும் கூறிவந்தது. ஆனால் விஞ்ஞானிகளும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தன்னிச்சையாக நடத்திய ஆய்வின் முடிவில்தான் மேற்கண்ட உண்மை தெரியவந்தது.

இந்தக் கசிவை எப்படித்தான் அடைக்கப் போகிறார்கள்?:

அது இப்போதைக்கு சாத்தியமா என்றே தெரியவில்லை என்கிறார் டாக் ஹாமில்டன். எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் இவரும் ஒருவர். "ஒரு இடத்தில் எண்ணெய்க் கசிவதாகத்தான் சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல... மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய்க் கசிந்து கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. இதை அடைப்பது கஷ்டம்" என்கிறார் ஹாமில்டன்.

சரி எத்தனை நாளைக்கு இந்த எண்ணெய் கசிவு இருக்கும்...? அந்த கிணற்றின் இருப்பு எவ்வளவு?.

இந்தக் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் தந்துள்ள பதில் 'தெரியாது'. இதுதான் விஞ்ஞானிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு இடத்தில் எவ்வளவு இருப்பு உள்ளது என்று தெரியாமலா பல பில்லியன் டாலர்களைக் கொட்டுகிறதா அந்த நிறுவனம்? பிரிட்டிஷ் பெட்ரோலியம் அப்பட்டமாக பொய் கூறுகிறது என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஒபாமா நிர்வாகம் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், இதுவரை எந்த கடுமையான நடவடிக்கையையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மீது எடுக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள்?:

டிஸ்கவரர் என்டர்பிரைஸஸ் எனும் நிறுவனம் மூலம் கடலில் கசிந்துள்ள எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6,30,000 காலன் எண்ணெய்தான் கடலிலிருந்து சேகரித்து, எரிக்கப்பட்டு்ள்ளது. இந்தப் பணியில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் இரு ஒப்பந்ததாரர்கள் தங்கள் சொந்த கப்பலை ஈடுபடுத்தினாலும், இதற்கென தனி கட்டணத்தை எதிர்ப்பார்க்கிறார்களாம்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமோ இந்த சுத்திகரிப்புப் பணிக்காக 1.6 பில்லியன் டாலரை ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறது.
நடந்துள்ள பெரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு முன்னால் இந்தத் தொகை ஒரு தூசு!.

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் தொழிலில் 10 நிறுவனங்கள் பல டிரில்லியன் டாலர் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. 180 பில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளன. ஆனால் ஒரு எண்ணெய் கிணற்றின் கசிவை அடைக்க 1.6 பில்லியன் டாலர் மட்டுமே செலவிட முன்வந்துள்ளது எத்தனை பெரிய கொடுமை!.

எண்ணெய் பரவாமல் இருக்க தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர் அமெரிக்க கோஸ்ட் கார்ட் மற்றும் கடற்படையினர். ஆனால் அது ஓரளவுதான் பலன் தந்தது. கசிவின் அளவு அதிகமாக உள்ளதால் தடையைத் தாண்டி கடலில் எண்ணெய் பரவிக்கொண்டே உள்ளது.

சுத்தப்படுத்துதல், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக 17,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா நியமித்துள்ளது. பல தன்னார்வ நிறுவனங்களும் ஈடுபடத் தயாராகி வருகின்றன. ஆனாலும் உடனடிப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

இந்த எண்ணெய்க் கசிவால் லூசியானா மற்றும் மெக்ஸிகன் வளைகுடா கரையோரங்களில் வசிக்கும் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த மக்களின் அடிப்படைத் தொழிலே மீன்பிடிப்பதுதான். இனி பல மாதங்களுக்கு அந்தத் தொழிலைத் தொடவே முடியாது. பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் அடர்த்தியாகக் காணப்படுவதால், இங்கெல்லாம் மீன்கள் சரளமாக வரவே பல ஆண்டுகள் மாதங்கள் பிடிக்குமாம்.

இயற்கை வளங்கள், அந்தப் பகுதி கடற்கரைகள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பின் அளவைக் கூட இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் அது எந்த அளவாக இருந்தாலும் முழுமையாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் ஈடு செய்ய வேண்டும் என இப்போது அறிவித்துள்ளார் ஒபாமா.

பாதிக்கப்பட்ட பகுதியை முழுவதுமாகப் பார்த்தபின் அவர் கூறியது இது: "பெரும் புயல், இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட அமெரிக்கா இப்படியொரு மோசமான பாதிப்புக்கு உள்ளானதில்லை. இது நிச்சயம் மிகப் பெரிய சவால்தான். ஆனால், கடலில் கலந்துள்ள 90 சதவிகித எண்ணெயை சுத்தப்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்குக் காரணமான நிறுவனத்தை சும்மா விட முடியாது. முழுமையான நஷ்ட ஈடு தந்தாக வேண்டும்" என்றார்.

இனி ஆயில் நிறுவனங்களுடன் அமெரிக்கா பங்குதாரராக இருக்காது.. கண்காணிப்பாளராக இருந்து இனியொரு விபத்து நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் முழங்கியுள்ளார்.

ஆனால் அவரது இந்த வார்த்தைகள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சமாதானப்படுத்தியதாகத் தெரியவில்லை. 60 நாட்கள் வரை அமைதியாக வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இன்று அவர் கூறியிருப்பது வெற்று வார்த்தைகளே என்று எதிர்க்குரல் எழுப்பியுள்ளனர் மக்கள்.

இந் நிலையில் ஆர்டிக் கடல் பகுதியில் புதிய மெகா சைஸ் எண்ணெய் கிணறுகளைத் தோண்ட ஷெல் கார்ப்பரேஷனுக்கு இரு தினங்களுக்கு முன் அனுமதி தரப்பட்டுள்ளதையும், இந்த ஷெல் நிறுவனத்திடமும் எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் மாற்றுத் திட்டம் இல்லை என்பதையும் என்னவென்று சொல்வது...!