.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, July 26, 2009

பென்ஷனுக்காக போராட்டமா? ஜனாதிபதிக்கு இணையத்தின் மூலம் புகார் அனுப்பலாம்


புதுடெல்லி, ஜூலை 25- எவ்வளவோ போராடிப் பார்த்தும் பென்ஷன் கிடைக்கவில்லையா, ஜனாதிபதிக்கு உங்கள் புகார் மனுவை இணையதளம் மூலமாக நேரடியாக அனுப்பி வைக்கலாம். இந்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க ஜனாதிபதி மாளிகை நடவடிக்கை எடுக்கும்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தகவல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், அவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவனில் காகிதங்களில் நடக்கும் வேலைகள் குறைத்து கொள்ளப்பட்டு கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது பொதுமக்கள் புகார்களை பெற்றுக் கொள்வதற்காக http://helpline.rb.nic.in/ என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே நாள்தோறும் சராசரியாக 400 புகார் மனுக்கள் ராஷ்டிரபதி பவனுக்கு வருகின்றன. இவற்றை பிரித்து உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறும், அதற்குரிய பதிலை அனுப்பி வைக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொள்வார்கள்.
இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ் கூறியதாவது:
இணையதளம் பற்றி பொதுமக்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் இதை பயன்படுத்துவது அதிகரிக்கும். இப்போது காகிதத்தில் எழுதி அனுப்பப்படும் மனுக்களையும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து பிற துறைகளுக்கு அனுப்ப உள்ளோம். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், புகார் கொடுத்தவருக்கு உரிய பதிவு எண்ணை கொடுக்கிறோம். ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஞாபகப்படுத்தி, சம்பந்தப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. தங்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில்தான், ஜனாதிபதிக்கு தங்கள் புகார்களை பொதுமக்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: