.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, January 23, 2010

வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பிப்ரவரி வரை நீட்டிப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை இதுவரை பெறாதவர்கள் வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு. கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் இதுவரை ரூ. 24 ஆயிரமாக இருந்தது. இது ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்காதவர்கள் வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.

பள்ளி இறுதி வகுப்பிற்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்பபு அலுவலகப் பதிவினை நாளது தேதிவரை புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட சான்று, அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பதாரரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 26ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள், ஆண்டுக்கு ஒருமுறை சமர்பிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை வரும் பிப்ரவரி 26-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணத்தை சமர்ப்பிக்காதவர்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும்.

பயனாளிகள் அனைவருக்கும் நடப்பு காலாண்டிற்கான உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காதவர்கள் மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

No comments: