.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, November 11, 2008

ஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர்பா?

ஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர்பா?


நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனஆனால், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அபத்தமானது. இது பிரிவினை அரசியல் என்று சோனால் ஷா மறுத்துள்ளார்.


சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.


இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.


எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.


தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.


புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.


ஆர்எஸ்எஸுடன் தொடர்பில்லை: சோனால் மறுப்பு


இதற்கிடையே தனக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இந்துத்வா அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அபத்தமானது. இது பிரிவினை அரசியல் என்று சோனால் ஷா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகளும், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் கொள்கைகளும் வேறு வேறானவை. அதுபோன்ற எந்த அமைப்பின் கொள்கைகளுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய அரசியலுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தொடர்புபடுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை.


குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளில் பிற மனிதாபிமான அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் சேவையாற்றியுள்ளேன். அதற்காகப் பெருமைப்படுகிறேன்.


பிரிவினைவாத அரசியலை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதை வெறுக்கிறேன். மதவாத, இனவாத, வன்முறையைத் தூண்டும் அரசியலுக்கு நான் எப்போதும் எதிராகவே இருந்துள்ளேன். மதங்களையும், இனத்தையும் அரசியல் கருவியாக பயன்படுத்துவதை நான் விரும்பியதில்லை.


எனக்கும், இந்துத்வா அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்திகளே ஆகும். ஆதாரமற்ற புகார்கள் இவை.


2001ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் செயல்பட்டேன். அதை பெருமையாகவே கருதுகிறேன்.


இன்டிகார்ப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்ற முறையில் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாகவே கருதுகிறேன்.


இதைத் தவிர்த்த இந்துத்வா அமைப்புகளின் எந்த வகையான கொள்கைகளையும் நான் ஆதரித்ததில்லை. பின்பற்றியதில்லை. ஒருபோதும் அவர்களுக்கு இணக்கமாக இருந்ததில்லை.


அதிபராக ஓபாமா தேர்வாகியிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அதிகார மாற்றப் பணிகளில் நான் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளேன்.ஒரு இந்திய- அமெரிக்கராக, ஓபாமா - பிடன் அதிகார மாற்ற ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பதை கெளரவமாக கருதுகிறேன். அதிபரால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெறுவது என்பது மிகவும் சந்தோஷமானது. அதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வதந்திகள் எழுவது இயற்கைதான் என்று சோனால் ஷா கூறியுள்ளார்.

No comments: