.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

Friday, July 23, 2010

மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

வை வெறுமனே உள்ள செய்திகள் அல்ல;

மனதின் ஆன்மாவைத் தொட்டு நியாயம் கேட்கும் நீதியின் குரல்!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம். அன்று திங்கள்கிழமை. மனுநீதி நாள் முகாம். மக்கள் பரபரப்புடன் தங்கள் மனுக்களை அளித்துக்கொண்டு இருந்தனர். அந்த வரிசையில் ஒரு சிறுவன் கையில் மனுவுடன் தன்னந்தனியாக நின்றுகொண்டு இருக்கிறான். கலெக்டர் சகாயத்தின் கவனம் முழுக்க அந்தச் சிறுவன் மீதே இருந்தது.

"நான் அந்தப் பையனையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அவன் முறை வந்ததும் மனுவை என் கையில் தந்தான். கிறுக்கலான கையெழுத்து அதுல. அதை வாங்கி வெச்சுக்கிட்டு, 'என்னப்பா பிரச்னை'ன்னு கேட்டதும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். 'என் பேர் நவீன். நான் கபிலர் மலையில இருந்து வர்றேன். ஆறாங்கிளாஸ் படிக்கிறேன். எங்க வீட்டுல நான், அம்மா, அப்பா, ரெண்டு தங்கச்சி. வீட்டுல எங்க அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. 10 நாளைக்கு முன்னாடி எங்க அம்மா பக்கத்து வீட்டு ஆள்கூட ஓடிப்போயிடுச்சு. அதுல இருந்து எங்க அப்பா என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொல்லி, தங்கச்சிகளுக்கு சமைச்சுப் போடச் சொல்லிட்டாரு. எனக்குப் படிச்சுப் பெரிய போலீஸ் ஆகணும்னு ஆசை. எப்படியாச்சும் எங்க அம்மாவைக் கண்டுபிடிச்சு எங்க அப்பாகூடச் சேர்த்துவெச்சுடுங்க சார்'னு அழுதான்.

ஒரு சின்னப் பையன்கிட்ட இருந்து அப்படி ஒரு புகாரை எதிர்பார்க்கவே இல்லை. அவனைச் சமாதானப்படுத்தி மதிய சாப்பாட்டுக்கு என்கூட வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போனேன். 'கவலைப் படாதே, உங்க அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நிச்சயம் போலீஸ் ஆகலாம்'னு நானும் என் மனைவியும் அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவெச்சோம். உடனே, சமூக நலத் துறையில சொல்லி நவீனின் அம்மாவைத் தேடுற முயற்சிகளை முடுக்கிவிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு செய்தித்தாளைப் பார்த்தா... அதிர்ச்சி! 'மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை'ன்னு செய்தி. கீழே தங்கச்சிகளோடு நவீன் இருக்குற போட்டோ! 10 வயசுப் பையனுக்குப் பிரச்னையைத் தீர்க்க கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கணும்னு தெரிஞ்சிருக்கு. ஆனா, அவனோட அப்பாவுக்கு? நாலஞ்சு நாள் எனக்குத் தூக்கமே புடிக்கலை. அந்தக் குழந்தைங்க முகத்தைப் பார்த்தா யாருக்காச்சும் கொல்ல மனசு வருமா? அதுவும் விஷம் கொடுத்துக் கொன்னுட்டு, தூக்குல வேற தொங்கவிட்டு இருக்கான். 'நான் போலீஸ் ஆகணும் சார்'னு சொன்ன நவீனோட வார்த்தைகள் இப்பவும் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு!"

நன்றி:விகடன்

Thursday, April 22, 2010

''அரசு கொடுத்த பரிசு...!'' குணங்குடி அனீபா குமுறல்

கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் குணங்குடி அனீபா. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், பா.ம.க-வின் முன்னாள் பொருளாளர், ஜிஹாத் கமிட்டி தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்தவர் குணங்குடி அனீபா. ரயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பூந்தமல்லி கோர்ட்டில் கடந்த வாரம் ஆஜரான அனீபாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

? ''13 வருட சிறை அனுபங்கள் எப்படி இருக்கு?''

''நீதிமன்றக் காவலில் எனக்கு இன்பமும் துன்பமும் சேர்ந்தே கிடைத்தன. நல்ல ஆரோக்கியமாக இருந்த நான், சிறைக்கு வந்த பிறகு கண்பார்வைக் குறைவு, ரத்தக்கொதிப்பு, இதய வலி, நீரிழிவு, முதுகுதண்டுத் தேய்மானம் என்று பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டேன். அதன் விளைவு... இப்போது ஊன்றுகோலுடன் நடமாடும் நிலை எனக்கு! சிறையில் நான் பராமரிக்கும் செடி கொடிகள்தான் எனக்கு நண்பர்கள். 33 வருடங்களுக்கு முன்பு என் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள், ஒரு மகள், இரண்டு பேத்திகள், ஒரு பேரனோடு எனது தாய் தந்தையரும் இருக்கிறார்கள். அவர்களோடு எனது கடைசி காலத்தை கழிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய என் ஆசை!''

? ''உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் நிலை இப்போது என்ன...?''

''மறைந்த தமிழ்ப் புலவர் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் குடும்பத்தைச் சேர்ந் தவன் நான். த.மு.மு.க., பா.ம.க., ஜிஹாத் கமிட்டி என்று பொறுப்புகள்

வகித்தபோது மக்கள் பிரச்னைக்காகவும் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டும் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். எனது சமூகப் பணிகளை விரும்பாத சிலர் தவறான தகவல்களை அரசிடம் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி, ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய்தது. தேவகோட்டை அனுமந்தக்குடியில் என் மகளின் திருமணம் நடந்துகொண்டிருந்த போது, என்னை போலீஸ் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நான் இன்றைக்கு சிறையில் இருப்ப தற்கு காரணமானவர்கள், பணியில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள் நேர்வழி பெற இறைவனிடம் வேண்டுகிறேன். 6.12.97-ல் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பு சதி வழக்கு தவிர, எல்லா வழக்குகளிலும் எனக்கு விடுதலை கிடைத்துள்ளது. இறைவன் சித்தம் இருந்தால் இதிலும் விடுதலை கிடைக்கும்!''

? ''நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறீர்களா..?''

''வன்முறையை இஸ்லாம் ஒருபோதும் போதிக்க வில்லை. யாருடைய உயிரையும் பறிக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. பல அமைப்புகளில் இருந்தபோதும், நான் துளிகூட தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. அதற்கு நானே ஓர் உதாரணம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நிரபராதி. எந்த மதத்துக்கும் நான் எதிரானவன் கிடையாது. 1987-ல் வட தமிழகத்தில் வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் மோதல் ஏற்பட்டபோது, அந்தப் பகுதிக்கு சென்று அமைதி ஏற்பட பாடுபட்டேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியபோது, நானும் கலந்துகொண்டேன். 97-ம் ஆண்டு தென் தமிழகத்தில் சாதி மோதல் வெடித்தபோதும் அமைதிக்காகப் பாடுபட்டேன். அப்போது முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டு ஒற்றுமைக்காகப் பாடுபட்டவன் நான்!''

?''தற்போதைய தி.மு.க. ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''1991 முதல் 1996 வரையில் கலைஞர் தலைமையில் ஏழு கட்சிகள் கூட்டணி இருந்தபோது, அந்த கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் சுமார் 25 முறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் நான் தொடர்ந்து கலந்துகொண்டு வந்தேன். கலைஞரே என்னுடைய பெயரை சொல்லி அழைக்கும் அளவுக்கு இருந்தேன். ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. கடந்த காலங்களில் தி.மு.க. அரசால்தான் நானும் என் குடும்பமும் இஸ்லாமிய மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டோம். போராளி பழனிபாபா, கோவை முஸ்லிம்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோவையில் சொத்துகள் அழிக்கப்பட்டன. தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் ஆட்சியில் அது அமர்வதற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வந்த முஸ்லிம் களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசுதான் அடக்குமுறை.

எங்களின் மனவேதனை தீரவேண்டுமென்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதமும் மாநிலத்தில் ஐந்து சதவிகிமும் இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு பெற்றுத் தரவேண்டும். முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிய கலைஞரால்தான் இதையும் செய்ய முடியும்...'' என்றவர்,

''ஜூ.வி. மூலம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்...'' என்றபடி இதையும் சொன்னார்-

''மத்திய-மாநில காவல் துறை விசாரணை செய்து, அந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பொதுமன்னிப்பு பொருந்தாமல் தமிழகச் சிறை களில் உள்ள கோவை பாட்ஷா உட்பட ஐம்பது முஸ்லிம்கள் மற்றும் நளினி, முருகன் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையட்டி தமிழக முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய உதவிட வேண்டும்!''

புதிய குற்றச்சாட்டுகள்...

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, ஈரோடு, திருச்சூர் ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடித்தன. இது நடந்தது 1997-ம் ஆண்டு. இந்த வழக்கில் அனீபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 'விசாரணை முடிந்து கடந்த 31-ம் தேதி தீர்ப்பு கூறப்படும்' என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அனீபாவின் வழக்கறிஞர் சிவபெருமாள், ''வழக்கின் நடைமுறைகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு தேதியும் குறிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட 'பொதுச் சொத்துகள் சேதம் விளைவித்தல் சட்டம்' பிரிவு 4, இந்திய ரயில்வே சட்டம் 151 ஆகிய பிரிவுகளை நீதிமன்றம் நீக்கிவிட்டு, இந்திய தண்டனை சட்டம் 109 பிரிவை புதுசாக சேர்த்துக் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்து புதிதாக நீதிமன்றம் சேர்த்திருப்பது தவறு என்று நீதிமன்றத்திலும் வாதாடினோம். அரசு தரப்பு வழக்கறிஞர்கள்கூட எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை...'' என்றார்.


நன்றி: ஜூவி
- எம்.தமிழ்செழியன்
படங்கள்: எம்.உசேன்

Monday, July 13, 2009

13 ஆண்டுகளாக தூக்கம் கலையாத அஞ்சல் துறை

மாவட்டங்களின் பெயர்களில் ஜாதி தலைவர்ககள், சுதந்திர போராட்டதியாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இருந்தாலும் அஞ்சலக "சீல்'களில் மட்டும் இன்னும் பழைய மாவட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதை யாரும் இதுவரையிலும் கவனித்ததாக தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் கள் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை கொண் டிருந்தது. செங்கை அண்ணா மாவட்டம், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், பசும்பொன் தேவர் மாவட்டம், காமராஜர் மாவட்டம் என்ற பெயர்களுடன் விளங்கியது. கடந்த 1996ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, ஜாதித்தலைவர்கள் பெயர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர்களை மாற்றியது. இதனால், காமராஜர் மாவட்டம், விருதுநகர் மாவட்டமாகவும், பசும் பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாகவும், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், திண்டுக்கல் மாவட்டமாகவும் பெயர் மாற்றம் பெற்றது. தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்களின் பெயர்களும் மாற்றப் பட்டன. இந்த பெயர் மாற்றம் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. பொதுவாக பெயர் மாற்றம் பெறும் போது மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்கள் அனைத்திலும் பெயர் மாற்றம் ஏற்பட்டுவிடும். அஞ்சல் துறை சார்பில், அஞ்சலகங்களில், கடிதங்கள் மீது பதிக்கப்படும் "சீல்'களிலும் ஊர் பெயர் மாற்றப்படும் வழக்கம் உள்ளது.


இதன் படி மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே அனைத்து ஊர்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டமாக உள்ள பசும்பொன் தேவர் மாவட்டத்தில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் மட்டும் இன்னும்" பி.எம்.டி' மாவட்டம் என்றே அஞ்சலக சீலில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு திருமணத்திற்காக சிவகங்கையில் உள்ள ஒருவருக்கு திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளார். தி.நகர் தபால் நிலையத்திலிருந்து அனுப்பப் பட்ட அந்த அழைப்பிதழில் கடந்த மாத 8ம் தேதிக்கான சீல் வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த மாதம் 12ம் தேதி சிவகங்கை மாவட்ட பள்ளத்தூர் அஞ்சலகத்திற்கு சென்று அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சீலில் "பள்ளத்தூர்' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளது. அடுத்ததாக அந்த ஊருக்கான அஞ்சல் குறியீட்டு எண் 630107 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக "P.M.T.DIST' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாக மாற்றப் பட்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் துறையான அஞ்சல் துறையில் மாற்றம் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. தமிழக அரசு இம்மாதிரியான பெயர்கள் இடம் பெறுவதன் மூலம் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பெயர்களை நீக்கியது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரும், இந்நிலை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""மாவட் டங்கள் பெயர் மாற்றம் பெற்றவுடன், அஞ்சலக சீல்கள் மாற்றப்பட்டுவிட்டன. அஞ்சல் துறையில் சீல்கள் மாற்ற வேண்டும் என்றால், அலிகாரில் உள்ள அஞ்சல்துறை ஸ்டோருக்கு " இண்டன்ட் ' போட்டு அனுப்ப வேண்டும். அவர்கள், இரண்டு மாதங்களில் தயாரித்து அனுப்புவர். பெரும்பாலும் சேதமடைந்துவிடும் இது போன்ற சீல்கள் இரண்டே மாதத்தில் கிடைக்கும். மாவட்டங்கள் பெயர்கள் மாற்றம் பெற்றதும், குறிப்பிட்ட அந்த அஞ்சலகத்தை சேர்ந்தவர்கள் இண்டன்ட் போட்டு அனுப்பி, அங்கிருந்து வராமல் இருக்கலாம்.

அல்லது அஞ்சலக அதிகாரிகளின் அலட்சியத்தால் இது நடந்திருக்கலாம்,'' என்றார். பள்ளத்தூர் அஞ்சலக அதிகாரியின் கவனக்குறைவோ அல்லது அலிகாரில் உள்ள அஞ்சல் துறை ஸ்டோரில் உள்ளவர்கள் கவனக்குறைவோ எது இருந்தாலும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஊரின் பெயர் மாற்றப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காத தன்மையை காட்டுகின்றது. தற்போது, இந்த ஒரு மாவட்ட பெயர் தான் தெரிந்துள்ளது. இன்னும் எந்தெந்த மாவட்டங்களின் பெயர்கள் அஞ்சல் துறையின் "சீல்"களில் மாற்றப்படாமல் உள்ளன என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.
நன்றி: தினமலர்