.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Wednesday, July 8, 2009

முஸ்லிம் மாணவன் தாடி: மன்னிப்புக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ

டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.

இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.

அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு த.மு.மு.க உட்பட நாட்டிலுள்ள அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (6/7/2009) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.

மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

Friday, June 19, 2009

நியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்க நிபந்தனை விதிப்பதாக பொதுமக்கள் புகார்!

ஒரு ரூபாய் அரிசி வழங்க நியாய விலைக் கடைகளில் நிபந்தனை விதிப்பதாக பொதுமக்கள் புகார்!

நியாயவிலைக் கடைகளில் சோப்பு, சேமியா வாங்கவேண்டும்! மண்எண்ணை, பாமாயில் கூடுதல் விலைக்கு விற்பனை!!


தமிழக அரசுக்கு கெட்டபெயரையும் பொதுமக்களுக்கு துரோகமும் செய்து வரும் நியாயவிலை கடைகாரர்கள், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நீதி வழங்குமா?

சென்னை, ஜூன்.18 நியாயவிலைக்க‍டைகளில் சோப்பு, சேமியா வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி வழங்குவதாகவும், மண்எண்ணை, பாமாயில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசி
ஏழை நடுத்தர மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் பொருட்களை வழங்கிவருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கிராமபகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.50-க்கு அனைத்து மளிகை பொருட்களும் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படுவது ஏழைகளுக்கு பயன் உள்ளதாக உள்ளது. பொதுமக்களுக்கு பயன்உள்ள இந்த திட்டங்களை நியாயவிலைகடைகாரர்கள் சரியாக செயல்படுத்துவது இல்லை என்பது அனைவரது குற்றச்சாட்டாகும்.

இப்படிப்பட்ட நியாயவிலைக் கடைக்காரர்கள் தமிழக அரசுக்கு கெட்ட பெயரையும், பொதுமக்களிடையே வெறுப்பையும் ஏற்படுத்திவருகிறார்கள்.

நியாயவிலை கடைகளுக்கு பெண்கள்தான் அதிக அளவில் செல்கிறார்கள். இவர்களை எந்த எந்த வகைகளில் ஏமாற்ற முடியுமோ அந்த வகையில் எல்லாம் அந்தக் கடைக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள்.

சோப்பு வாங்கினால்தான் அரிசி
ரூ.45 மதிப்புள்ள சோப்பு அல்லது சேமியா வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி, மண்எண்ணை தரமுடியும் என்று கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள்.

வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ அரிசி ரூ.15-க்கு குறைவாக கிடைப்பது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு ரூபாய் அரிசிக்கு கடும்கிராக்கி உள்ளது. இட்லி மாவு கடைக்காரர்கள், இடியாப்பம் தயார் செய்து விற்பனை செய்பவர்களுக்கு நியாயவிலை கடைகாரர்கள் ஒரு ரூபாய் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசியை வாங்குவதற்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் சென்னைக்கு படையெடுத்து வருகிறார்கள். இவர்கள் ஒரு ரூபாய் அரிசியை ரூ.4-க்கு வாங்கி ஆந்திராவில் ரூ.10-க்கு விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ரெயில் மூலம் அரிசி கடத்தல்
இவர்கள் நியாயவிலை அரிசியை ஆந்திராவுக்கு ரெயில் மூலம் கடத்திச்செல்வதாக கூறப்படுகிறது. நியாயவிலை கடைகளில் ஒரு லிட்டர் மண்எண்ணை ரூ.8.40-க்கு விற்பனை செய்யப்படுவதை கடைக்காரர்கள் முறையாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது இல்லை. கூடுதல் விலைக்கு புரோக்கர்களுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. நியாயவிலை கடைகளில் வாங்கப்படும் மண்எண்ணை ஒரு லிட்டர் ரூ.25-க்கு மேல் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். நியாயவிலை கடைகளில் உள்ள பாமாயிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் புகார் கூறப்படுகிறது.

நியாயவிலை கடைகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் புகார் மனுக்கள் எழுதிப்போட்டால் அவற்றை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். நியாயவிலைக்கடைகள் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரைதான் முறையாக செயல்படுகிறது. மதியம் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சரியாக இயங்குவது இல்லை. இந்த நேரத்தில் கடைகளுக்கு சென்றால் கணக்கு பார்க்கவேண்டும் என்று கூறி பொதுமக்களை கடைக்காரர்கள் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

தமிழக அரசுக்கு கெட்டபெயரையும் பொதுமக்களுக்கு துரோகமும் செய்து வரும் நியாயவிலை கடைகாரர்கள், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நீதி வழங்குமா?