.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, July 31, 2015

மத்யன் ஸாலிஹ்... வரலாற்றுப் பதிவின் பயணக் கட்டுரை... Mada'in Saleh

மத்யன் ஸாலிஹ்... வரலாற்றுப் பதிவின் பயணக் கட்டுரை...
********************************************************************************
கடந்த காலங்கில் வாழ்ந்து மடிந்த பல்வேறு சமுதாயங்களைப் பற்றிய வரலாற்று சம்பவங்களை அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அதில் ஒன்று மலைப்பாறை வாசிகள். ஸமூது சமுதாயத்தவர்களான அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 26 இடங்களில் குறிப்பிடுகிறான்.
அந்த சமுதாயத்தவர்களை நேர்வழிப்படுத்த ஸாலிஹ் அலை அவர்களை இறைவனின் தூதராக அனுப்பினான்.
மத்யன் ஸாலிஹ் (ஸாலிஹ் (அலை) வாழ்ந்த இடம்) என்று தற்போது அழைக்கப்படும் இந்த நகரத்திற்குப் பெயர் அல் ஹிஜ்ர் என்பதாகும்.
அருள்மறையாம் திருமறையில் ஹிஜ்ர் என்று ஒரு அத்தியாயமே உள்ளது.
இந்த நகர்வாசிகளைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்...
ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. 41-17
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. 15:80-84
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
“என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார்.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,
(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான். (அல் குர்ஆன் 11:61 to 68)
(இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; 17:59.
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த குடியிருப்புகளிலிருந்து (ஒரு சில அடையாள சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான். 29:38
ஸமூது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. 51:43
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். 91:11
அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்! 11:95
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை பொய்ப்பித்தனர். எனவே, ஸமூது கூட்டத்தார் பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். 69:4-5
இவ்வாறு ஹிஜ்ர் (மதைன் ஸாலிஹ்) நகரில் வாழ்ந்த மக்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் விவரிக்கின்றான்.
சவூதி அரேபியாவில் மதினாவிற்கு அடுத்து தபூக்செல்லும் வழியில் இந்த இடம் உள்ளதென்று கேள்விப்பட்டு நீண்ட ஆண்டுகளாக அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற நமது என்னத்தை அல்லாஹ் இந்த ஆண்டு நிறைவேற்றி வைத்தான். அல்ஹம்து லில்லாஹ்.
அங்கு செல்வதற்கு முன் அந்த இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு விசாரித்ததில், பலரும் பல தகவல்களைச் சொன்னார்கள். அங்கு செல்வதற்கு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றும் பல விதமான தகவல்களை சவூதியில் உள்ள நம் மக்கள் சொன்னார்கள். ஆனால் அவ்வாறான நிலையில்லை செல்வதறக்கு முன் அனுமதியோ முன் பதிவோ தேவையில்லை.
மத்யன் ஸாலிஹ், தலைநகர் ரியாத்திலிருந்து புரைதா மற்றும் ஹைல் வழியாக 1042 கி.மி. வட மேற்கே உள்ளது. மதினாவிலிருந்து பழைய சாலை (கைபர் நான்கு வழிச்சாலை) வழியாகச் சென்றால் 435 கி.மி. கிராமப்புறம் வழியாக புதிய சாலை (இருவழிச்சாலை) வழியில் சென்றால் 358 கி.மி. நாங்கள் கிராமப்புறம் வழியாக உள்ள இருவழிச் சாலையில் தான் சென்றோம். மக்காவிலிருந்து ஜித்தாஹ், துவாத், யான்போ வழியாக 744 கி.மி.
இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சி அடுத்த இதழில்... .
நமது மக்கள் உரிமையில் பத்திரிக்கையில் தொடர்ச்சியாக வருவதால், இன்ஷா அல்லாஹ் நமது இதழில் வந்த பின் இன்ஷா அல்லாஹ் முகநூலில் பதிவேற்றப்படும்.






No comments: