.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, April 4, 2010

லாலுவையும் முலாயமையும் தமுமுக தமிழகம் அழைப்பதன் காரணம் என்ன?

"பாடம் புகட்ட வருகிறது வடக்கு"
_________________________________________
நன்றி: ஜூவி

ந்திய முஸ்லிம்களின் முக்கிய தலைமை அமைப்பான 'அகில இந்திய முஸ்லிம்கள் தனி சட்ட வாரிய'த்தின் 21-வது பொதுக்குழுக் கூட்டம், கடந்த வாரம் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்தது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் கலந்துகொண்டார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2005-ல் அறிமுகப்படுத்திய வகுப்பு கலவர சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சில மாற்றங்கள் செய்து அதை 2009-ல் மீண்டும் அறிமுகப்படுத்தியது. இப்போது இதற்கும் அகில இந்திய முஸ்லிம்கள் தனி சட்ட வாரியக் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதாமே?''

''ஆம்! அதைத் தற்போதைய வடிவத்தில் நிறை வேற்றக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. காரணம், 2005-ல் அறிமுகப்படுத்தியதைவிட எந்த வகையிலும் அதன் அடிப்படை மற்றும் நோக்கம் மாற்றப்படவில்லை. கலவரக்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் அதில் இல்லை. அது, மாநில அரசு மற்றும் காவல் துறைக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் கொடுப் பதாகவே உள்ளது. அந்தச் சட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்து அறிமுகப்படுத்தவேண்டும் என பிரதமரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்.''

''பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து உங்கள் தனி சட்ட வாரியம் விவாதிக்காமல் விட்டதன் காரணம்?''

''முஸ்லிம்களின் தனிச்சட்டங்களை மட்டும் விவாதிக்க அமைக்கப் பட்ட இந்த அமைப்பில், மத்திய அரசு அமல்படுத்தும் பெண்கள் மசோதா குறித்துப் பேசுவது சரியாக இருக்காது. ஆனால், இதன் உறுப்பினர்களான த.மு.மு.க., ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த், இந்திய தேசிய லீக் உட்பட முக்கிய முஸ்லிம் அமைப்புகள் மசோதா குறித்து எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. முஸ்லிம் சமுதாயப் பெண்களுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீடு இருப்பதால், த.மு.மு.க. சார்பில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் போன்ற வடஇந்திய தலைவர்களை தமிழகம் வரவழைத்துப் பெரிய அளவில் ஒரு மசோதா எதிர்ப்பு கூட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.''

''லாலுவையும் முலாயமையும் அழைப்பதன் முக்கியக் காரணம் என்ன?''

''நம் நாட்டில் சமூக நீதி காக்கும் பாசறையாக விளங்கும் மாநிலம் தமிழகம். அதை அடிப்படையாகக் கொண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய பெரிய திராவிடக் கட்சிகளும் அந்த மசோதாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பதுடன், உள்ஒதுக்கீட்டையும் கேட்க மறுத்துவிட்டன. இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில்தான் லாலு, முலாயம் போன்ற வடஇந்தியத் தலைவர்களை தமிழகம் அழைத்துள்ளோம்...''
- சாந்தினி
படம்: எஸ்.சபா

No comments: