.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, June 8, 2010

இஸ்லாத்தில் ஏன் சேர வேண்டும்? தந்தை பெரியார் அவர்கள் எழுதியது


எனது 18.03.1947- ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடிஅரசு" வில் படித்த தோழர்கள் பலரில் சுமார் 10, 15- தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், 'வழவழா' என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால், அவைகளுக்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன்.

கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மதத்தின் மீது நமக்குள்ள மதவெறுப்புக் காரணமாகவே அந்த மத மக்கள் மீதும் வெறுப்படைகிறோம். இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம் இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள் (ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால் இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்துவிடுகிறது. இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும்.

மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு - தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.
இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள்தான் உண்டு. அதுவும் உருவமற்ற கடவுள்தான்.

இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு தாழ்வுகள் கிடையாது. பிறவியின் காரணமாய் ஜாதிப்பாகுபாடும், மேன்மை - இழிவும் கிடையாது.

அதாவது, இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி), பறையன் (கடை ஜாதி) பஞ்சமன் என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையது; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இந்து (ஆரிய) மதம் என்பது, பல கடவுள்கள், பல ஜாதிகள் அதிலும் கடவுள்களால் சிருஷ்டிக்கப்பட்ட ஜாதிகள் என்கின்ற அடிப்படையைக் கொண்டது. இந்தப் பல கடவுள், பல ஜாதி என்கின்ற தன்மையால், ஆரியர்கள் (பிராமணர்கள்) நல்ல வசதியும் பயனும் அடைகிறார்கள். திராவிடர்கள் கேடும், கீழ்மையும், மனித உரிமைத் தடையும் அடைகிறார்கள். ஆதலாலேயே இஸ்லாத்தின் கொள்கை பிராமணர்களுக்கு மிகக் கேடானதாக இருந்து வருகிறது. திராவிடர்களுக்கு இஸ்லாத்தினால் நலம் ஏற்ப - இழிவு நீங்க வசதியாகிறது.

ஆகவே தான் பார்ப்பனர்கள் (பிராமணர்கள் - ஆரியர்கள்) இஸ்லாத்தை வெறுக்கச் செய்ய வேண்டியவர்களாகிறார்கள். இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால் பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இரா. பல கடவுள்களும், விக்கிரக (உருவ)க் கடவுள்களும் இருக்கமாட்டா. இந்த விக்கிரகக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும்.

இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது. ஆகவே, இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர்(திராவிடர்)களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிருஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம சமாஜம்; பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை.

ஏன் என்றால், கிருஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஒரு அளவுக்கு விரோதமானவை. ஆதலால், இவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் இந்து, கிருஸ்தவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல் கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். அனேக பார்ப்பனர்கள் கூட கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பன சீக்கியனும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும், ஒரு அளவுக்கு ஜாதிப் பாகுபாடு) அனுசரிக்கிறான். சீக்கியரில் தீண்டப்படாத, கீழ்ஜாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை கூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்கும் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைந்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

கிறிஸ்தவரிலும் நம் நாட்டில் தீண்டப்படாத கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிலர் படிப்பிக்கப்பட்டு உபாத்தியாயர் வேலை கொடுக்கப்பட்டிருப்பதோடு சரி என்பது அல்லாமல், மற்றப்படி அவர்களுக்குக் கிருஸ்தவரிலாகட்டும், இந்துக்களிலாகட்டும் இஸ்லாமியர்களுக்கு அளிப்பது போன்ற உரிமை கூட அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஆதலால் ஆரியர்கள் கிருஸ்தவம், சீக்கியம் ஆன மதங்களுடன் நேசமாக இருக்கிறார்கள். பவுத்தம், சமணம் முதலியவையும் நடப்பில் இஸ்லாத்தை வெறுப்பதால் இந்துவுடன் வேஷத்தில் உறவாடுவதால் அவைகளிடம் ஆரியருக்கு அவ்வளவு வெறுப்பு இல்லை.

எனவே, இஸ்லாம் மதம் பார்ப்பனர்களால் சுயலாபம், வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால் இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன ஆரிய அடிமைகளாலும் மூடநம்பிக்கையால் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல் இந்து மதப் பிரசாரத்தின் முக்கிய தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

இஸ்லாம் யாரால் ஏற்பட்டது? புத்தர், கிருஸ்து போன்ற மற்றொரு சீர்திருத்தவாதியால் ஏற்பட்டதே அல்லாமல் வேறு என்ன? இஸ்லாம் ஏற்பட்டது எதற்கு? என்றால், பல கடவுள் கொள்கை, உருவக் கடவுள் கொள்கை, மக்கள் பிறவி பேதக் கொள்கை ஆகியவற்றை ஒழித்து ஒரு கடவுள், ஒரு சமூகம் (ஜாதி) ஆக்குவதற்கும், மூடநம்பிக்கை, விக்கிர வணக்கத்தை ஒழித்து பகுத்தறிவுக்கு இணங்கவும் ஏற்பட்டதேயாகும்.

அராபியர் மதம், துருக்கியர் மதம் என்பது போல் இதைத் திராவிடர் மதம், அல்லது திராவிட மதம் என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. எப்படியாவது மக்கள் ஜாதிபேதம், பிறவி உயர்வு தாழ்வு, பல கடவுள், உருவ வழிபாடு ஆகியவற்றில் இருந்து விலக வேண்டும். பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்து இழிவுபட்டு தலையெடுக்க முடியாமல் இருக்கும் கேட்டிலிருந்து மீளவேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து ஒன்றையும் கொண்டு நாம் இப்படிச் சொல்லவில்லை என்பதைத் திராவிடர்கள் உணரவேண்டும்.

பார்ப்பானிடம் அன்பு, பார்ப்பானிடம் நேசம் வைத்துப் பார்ப்பான் போல வேஷம் போட்டு நடித்துக் கொண்டு, சூத்திரனாக இருக்கச் சம்மதிக்கும் ஒருவன், அதுவும் திராவிடனாக இருப்பவன் இஸ்லாமியரிடம் அன்பு, நேசம், வேஷம், நடிப்பு நடித்து சூத்திரனல்லாதவனாக, திராவிடனாகவே இருப்பதில் என்ன வெட்கக்கேடு என்பது நமக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் 100- க்கு 10- பேர்களாக மக்களிடம் நேசம் பூண்டு கலந்து சுதந்திரத்தோடு, மானத்தோடு வாழ வெட்கமோ, வெறுப்போ பட்டுக் கொண்டு, 100- க்கு 3- பேராய் இருக்கும் நம்மிலும் வேறுபட்ட, நம்மை இழிவுபடுத்தும் மக்களுடன் சேர்ந்தவர்களாகச் சொல்லிக் கொண்டு, மானம் - சுதந்திரம் இல்லாமல் இழிவாழ்வு வாழ்வதற்கு மனம் சகிக்கக் காரணம் என்னவென்றால், பார்ப்பான் நம்மை இஸ்லாத்தக்கு எதிரிகளாக ஆக்கியதைப் "பேய், பிசாசு, பூச்சாண்டியாக" போதித்து இருப்பதைத் தவிர வேறு காரணம் என்ன சொல்ல முடியும்? நம்மிடத்திலே இல்லாத கெட்ட பழக்கம் இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? இஸ்லாத்தில் இல்லாத நல்ல பழக்கம் நம்மிடத்தில் என்ன இருக்கிறது? நாம் எந்த நல்ல காரியத்தைச் சீர்திருத்தத்தைச் செய்வதை இஸ்லாம் தடுக்கிறது?

"கையை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய்" என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். "காலை வெட்டிவிட்டாலொழிய பிழைக்கமாட்டாய்" என்றால் காலை வெட்டி விடச் சம்மதிக்கிறோம் மலஜலம் கழிக்க வேறு ஒட்டை போட வேண்டுமென்றால் போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கின்றோம், எடுத்துவிட வேண்டும் என்றால் கர்ப்பப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம்.

அப்படி இருக்க ஓர் அயோக்கியர் கூட்டம் நம்மை பிடித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம் மீது பலாத்காரத்திலும், தந்திரத்திலும் புகுத்தி இழிவுபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், எதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு எப்பொழுதுதான், எந்த வகையில்தான் மறைவது என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால் அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்.

கோபிக்கும் தோழர்களே! வேத சாஸ்திரங்களை, புராண இதிகாசங்களை நெருப்பிட்டுக் கொளுத்துவதால் சூத்திரப்பட்டம் ஒழியப் போவதில்லை. கோவில்களை இடிப்பதாலோ, விக்கிரங்களை உடைத்துத் தூள் தூளாக்குவதாலோ, சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. மறுபடியும் தோசையைத் திருப்புவது போல் பழையபடி திருப்பிவிடப் பார்ப்பனருக்குத் தெரியும், முடியும்.

திராவிடன் என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இன்றைய நிலைமையில் நான் இந்துவல்ல என்று சொல்லிக் கொண்டாலும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இந்து மதம் லேசில் ஒழியாது. அது பச்சோந்தி போல் சுலபத்தில் சாகும் மதமல்ல. அதைச் சாகடிப்பதற்கு நம் ஆயுளும் நம் போன்றோர் ஆயுளும் கூடப் போதாது. ஆகவே, நாம் அதை (இந்து மதத்தை) விட்டு விலகுவதுதான் நம் ஆயுளில் முடியக்கூடிய காரியமாகும். அதுப்படி நாம் விலகினோமேயானால், நாம் யார் என்று சொல்லிக் கொள்ள இன்றைய நிலைக்கு ஒரு பெயர் வேண்டும். அதைப் பத்தாக உண்டாக்க வேண்டும், பரப்ப வேண்டும். அதை இன்றயை காந்தி சர்க்கார் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அதற்குச் சட்டம், சம்பிரதாயம், செலவாணி ஏற்படவேண்டும். அதற்கு உண்டான பிரதிநிதித்துவம் - உரிமை நிர்ணயித்து ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வளவும் செய்வதென்றால் பார்ப்பன எதிர்ப்புக்கும், சூழ்ச்சிக்கும், பனியாக்கள் ஆதரவுக்கும் முன்னால் சுலபத்தில் ஆகக் கூடியதா? நம் நெல்லிக்காய் மூட்டை சமுதாயத்தால் நினைக்கக் கூடியதா? என்பதையும் சிந்தியுங்கள். பிறகு இப்படி எல்லாம் இல்லாமல் இந்தக் கஷ்டங்களுக்கும், முடியாமைக்கும் ஆளாகாமல் ஏற்கனவே ஏற்பட்டு, உலகம் பூராவும் செல்வாக்கும் செலவாணியும் பெற்று, எவரும் சிந்தித்துச் சிந்தித்து ஒப்புக் கொண்டு அமுலில் இருந்து வருவதும், நமது உண்மையானதும், உரிமையானதுமான கொள்கை கொண்டதுமாய் இருக்கும் சமுதாய சமத்துவ சமயத்தை "நான் தழுவிக் கொண்டேன்" என்று சொல்லுவதில் என்ன தப்பு, என்ன கஷ்டம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாம் என்றால் உங்களுக்குக் கசப்பும், கோபமும் ஏற்படக் காரணம் என்ன? இந்து என்றால் உங்களுக்கு ஓர் இனிப்பும், திருப்தியும் ஏற்படக் காரணம் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். அல்லது இதற்கு (உங்கள் சூத்திரப்பட்டம் இழிவு நீங்க - உங்கள் காலத்தில் நீங்க) ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள். என் அபிப்பிராயத்தை நான் சொன்னேன். உங்கள் அபிப்பிராயம் நீங்கள் சொல்லுங்கள். வாதம் பிடிவாதம் செய்து கொண்டு வம்பளத்து கொண்டே இருந்துவரும் காலம் கடத்தி நாம் சூத்திரனாக இருக்கும்படி விட்டு விட்டுச் சாவதா? இப்படியே செத்தால் பார்ப்பானுக்குத் தான் லாபம், நம் பின் சந்ததிகளால் அவனுக்குத் திவசம், தெய்வாராதனையும் கொடுக்கப்படும். ஆதலால் அவன் இதற்குச் சீக்கிரம் ஒரு முடிவேற்பட விடமாட்டான். நமக்குள் அடிதடி வரையில் கொண்டு வந்து விட்டுவிடுவான். எனவே யோசியுங்கள். தயவு செய்து ஆழ்ந்து கவலையோடு யோசியுங்கள். ஆரியமத அபிமானம் என்னும் வெறியை விட்டுவிட்டு மான அபிமானம் வைத்து யோசியுங்கள், கோபியாதீர்கள்.

சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல், இஸ்லாம் மார்க்கமும், இந்து மார்க்கமும், இரு மார்க்க மக்களும் முட்டிக் கொண்டால் சட்டம், அடி, உதை, சாவு திராவிடனுக்குத்தான், பார்ப்பானுக்கு எவ்வித நாட்டமும் இல்லை என்பது மாத்திரமல்லாமல் அவருக்கு வரும்படி உண்டு. இலேசாக கோர்ட்டில் பீசு, லஞ்சம், திதி, திவசம் முதலிய வைதிகச் சடங்கு, இவைகளால் தானே ஆரியர்கள் இன்று மேல்நிலையில் வாழ்ந்து கொண்டு நம்மைத் தமது அடிமையாக வைப்பாட்டி மகன் என்பதாகச் சட்டம், சாஸ்திரம், வகுத்து இழிவுபடுத்தினான் என்பதல்லாமல் வேறு எதனால்?

ஆகவே மற்றொரு முறை சிந்தியுங்கள்.

மறுபடியும் எழுதுகிறேன்.

 - தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. ("குடிஅரசு" - 05.04.1947)

1 comment:

Riyas said...

ம்ம்ம்