.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

No comments: