.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, March 28, 2012

பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி டிஎஸ்பி-பொய் வழக்கு மிரட்டல் வேறு!








நடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தானபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?




நடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தானபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.
விண்ணப்பங்கள் வாங்குவதற்காக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் அதிகளவில் கூட்டம் அலைமோதியது. அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் விண்ணப்பம் கைவசம் இல்லை, விற்று தீர்ந்து விட்டது.
எனவே நாளை (இன்று) வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். இதைக்கேள்விப்பட்ட விண்ணப்பம் வாங்க வந்தவர்கள் நேற்றே சொல்லி இருந்தால், நாங்கள் வராமல் இருப்போம், மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்து இருக்கும் நாங்கள் எப்படி மீண்டும் ஊருக்கு சென்று விட்டு வருவது என்றனர். இதற்கிடையே சிலர் விண்ணப்பங்களை கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது.
இதையடுத்து பட்டதாரிகள் கல்வி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு விண்ணப்பம் தர மறுக்கிறீர்கள், ஆனால் வெளியில் தாராளமாக கூடுதல் விலைக்கு விற்கிறார்களே என்றனர். இதனால் அதிகாரிகளுக்கும், பட்டதாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பட்டதாரிகள் விண்ணப்பம் வழங்கும் மையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தர்மபுரி நகர டி.எஸ்.பி. சந்தானபாண்டியன், மறியலை கைவிட்டு கல்வி அலுவலகத்திற்கு வரும் படி அழைத்தார். அதற்கு ஒரு ஆசிரியை வர முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுக்கும், அந்த ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த ஆசிரியையை பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.
சமயத்தில் அங்கு வந்த ஆசிரியையின் கணவரும் அங்கு வந்து, விண்ணப்பம் கிடைக்காவிட்டால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால் தான் கேட்கிறோம் என்று கூறினார். அப்போது ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் அந்த ஆசிரியரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். எல்லோர் முன்பும் கை நீட்டி அடிக்கும் இந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? என்று அந்த ஆசிரியர் மீண்டும் கேட்டார்.
அப்போதும் டி.எஸ்.பி. சந்தாபாண்டியன் அவரை தாக்கினார். டி.எஸ்.பி.யால் தாக்கப்பட்ட கணவரை மீட்க வந்த ஆசிரியையும் டி.எஸ்.பி. கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். ஆசிரியை தடுமாறி கீழே விழுந்தார். டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் ஆசிரியர் தம்பதி மீது தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நேற்று நடந்த சம்பவம் ஒரு சாதாரண சம்பவம். சம்பந்தப்பட்டவர்கள் மறியலுக்கு முயன்ற போது போலீசார் 5 நிமிடத்தில் அதை சரி செய்து விட்டனர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து வருத்தம் தெரிவித்து சென்று விட்டனர். அதனால் அது தொடர்பாக எந்த வழக்குகளும், பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இன்று அது தொடர்பாக டி.எஸ்.பி. சந்தானபாண்டியனிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரியில் டி.எஸ்.பி. சந்தானபாண்டியனால் தாக்கப்பட்ட ஆசிரியரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை குடிபோதையில் இருந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். எனவே அவரை போலீசார் விட்டு இருக்கிறார்கள். டி.எஸ்.பி.யால் தாக்கப்பட்ட நபர் மீது பொய் வழக்கு போட நடவடிக்கை எடுத்து தாக்கப்பட்டவரையே மன்னிப்பும் வாங்க வைத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Video at Facebook : https://www.facebook.com/photo.php?v=416244121725015

And youtube: http://youtu.be/NGvXyk5ey1s




அணுஉலை - ஆற்றலா? அழிவா?

அணுஉலை - ஆற்றலா? அழிவா?

அணு உலைக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படவில்லை.

குவலயத்தின் உயிர்களையெல்லாம் வெற்றி கொண்டு செழித்திருக்கும் மனித இனம் தன் கண்டுபிடிப்புகளால் தன்னைத் தானே அழித்துக்கொள்வதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் அணுஉலை.

chernobyl_child_2001930ல் முதன்முதலில் அணுவின் கூறாக நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் அணுஉலைகள் தோன்றின. அணுவைப் பிளக்கும்போது கிடைக்கும் பேராற்றல் பேராசை கொண்ட மனிதனை ஈர்த்தது. பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை அணுவில் செலுத்திப் பிளந்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு நீரை ஆவியாக்கி அதன் மூலம் டர்பனைச் சுழற்றி, அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிப்பதே அணு உலைகளின் செயல்பாடு. அவற்றில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தன்மையைப் பொருத்தும், பயன்படுத்தும் முறை பொருத்தும் அணு உலைகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அணு உலைகளின் கழிவுகளான யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கலாம், அணுகுண்டு தயாரிக்கலாம். வல்லரசு நாடுகள் இதையே செய்கின்றன. சப்பானில் வீசியது கூட இவ்வாறு செய்யப்பட்ட அணுகுண்டின் சக்தியை சோதித்துப் பார்க்கும் முயற்சிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வல்லாண்மையில்தான் ஒளிந்துகொண்டுள்ளது இரகசியம். இதுதான் அணுசக்தி விஞ்ஞானிகளும், 2020ல் இந்தியா வல்லரசு என்ற கனவைக் கடைவிரித்த மேதகு அப்துல் கலாம் அவர்களும் கூடங்குளம் அணு உலைக்கு பரிந்து வரக் காரணம்.

இன்றைக்கு சற்றேறக்குறைய 400 அணுஉலைகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இதில் அமெரிக்காவில் மட்டும் 104 அணு உலைகளும், சப்பான், செருமனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் தலா 40-50 அணு உலைகளும், இந்தியாவில் 20 அணு உலைகளும் அதில் தமிழகத்தில் 1 அணு உலையும் செயல்படுகின்றன. தற்போது இந்தியாவில் நம் கவனம் கோரும் கூடங்குளத்தையும் சேர்த்து 10 அணு உலைகள் தயாரிப்பில் உள்ளன.

அப்படி எவ்வளவுதான் மின்சாரம் தேவை இந்தியாவிற்கு? இவ்வாண்டிற்கான தேவை 175000 மெகாவாட். இதில் 60-65 சதவிகிதம் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படுகிறது. 25% நீர் மற்றும் காற்று மூலம் பெறப்படுகிறது. சூரிய வெப்பம் மற்றும் இதர வழிகள் போக 4780 மெகாவாட் அதாவது 2.73% சதவிகித மின்சாரமே அணு உலைகளால் தயாரிக்கப்படுகிறது. இதில் மின்பகிர்வின்போது ஏற்படும் இழப்பினால் வீணாவதே அதிகம் என்கிறார்கள் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் முடியும் தருவாயிலும், 4 அணு உலைகள் அனுமதி வழங்கப்பட்டு தயாரிப்பிலும் இருக்கின்றன. மின் உற்பத்திக்குத் தயாராக இருக்கும் அணு உலையின் திட்டச் செலவு ரூபாய் 13615 கோடி. உற்பத்தித் திறன் 2000 மெகாவாட்.

நிலக்கரி பற்றாக்குறையாகி வரும் வேளையில் அணு உலைகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அமெரிக்கப் பிரதிநிதி ஆஷ்லே டெல்லிஸ் சொல்வது போல் சொகுசு வசதிதானா? இருப்பின் மக்கள் ஏன் பீதியடைய வேண்டும்? தெருவில் இறங்கி போராடவேண்டும்?

அணு உலைகள் உலகில் செயல்பட ஆரம்பித்த இந்த 80 ஆண்டுகளில் இதுவரை 1979ல் அமெரிக்காவில் 3மைல் தீவு விபத்து, 1986ல் ருசியாவில் செர்னோபில் விபத்து, மிக அண்மையில் 2011ல் சப்பானில் புகுஷிமா விபத்து போன்ற பெரும் விபத்துக்களைச் சந்தித்துள்ளது மனித இனம். இது தவிர சிறு விபத்துகள் எங்கெங்கும் நடந்த வண்ணமே உள்ளன. அணு உலைகள் தயாரிப்பு வெகு சில முதலாளிகள் கையிலேயே இருப்பதால் அதன் கட்டுமானக் குறைபாடுகளை கண்காணிப்பதோ, குறைபாடுள்ள உலைகளை நிராகரிப்பதோ நடப்பதில்லை. அவ்வாறான குறைபாடுகளால் கதிர்வீச்சுக் கசிவு என்பது ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

அணு உலைக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 40-50 ஆண்டுகள் மட்டுமே. அதன்பிறகும் அதில் கதிர்வீச்சு இருக்கும். அதனைப் பாதுகாப்பதே ஒரு பெருஞ்செலவு பிடிக்கும் தொழில்நுட்பம். அணுக்கழிவான யுரேனியம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளியிடுமாம். அதனினும் இக்கதிர்வீச்சு பல்லாயிரம் மைல்கள் கடக்கவல்லது என்பதும் அணு உலைகளின் ஆபத்தை நமக்கு உணர்த்துகின்றன.

அண்மையில் நடந்த புகுஷிமா விபத்தில் புகுஷிமாவிலிருந்து 8600 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்க மாகாணம் கலிபோர்னியாவிலும் தலைநகர் வாஷிங்டனிலும் கதிர்வீச்சு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் நிலைமையின் தீவிரத்தை நமக்கு தெரிவிக்கின்றன. புகுஷிமாவிலிருந்து சென்னை 6600 கி.மீ. தொலைவே. காற்றின் பாதை அமெரிக்கா நோக்கி இருந்ததால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் சமாளித்தார்கள். ஆனால் அடுத்து பெய்த மழைக்கு கொரியா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எனில் காற்றின் திசை இந்தியா நோக்கியும் திரும்பும் என்றுதானே பொருள்?

அணுஉலைக் கழிவுகளின் கதிர்வீச்சு பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவல்லன. புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்துவன. அயோடின் 131 எனும் வாயுக்கழிவு வெளியேறுவதால் ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதியும் தைராய்டு புற்றுநோயும் ஏற்படும்.

பேரிடர் மேலாண்மையில் கொட்டை போட்டவர்கள் சப்பானியர்கள்.

சப்பானில் புகுஷிமா அணு உலையின் மூன்றடுக்கு குளிர்விப்பான்கள் அடுத்தடுத்து பழுதடைந்த விபத்தில் உயிரிழப்பு சில நூறு மட்டுமே. பேரிடர் மேலாண்மையில் கொட்டை போட்டவர்கள் சப்பானியர்கள். அவர்கள் கண்டிராத பேரிடர்களே இல்லை எனலாம். அணு உலை விபத்து நடந்தவுடன் அந்நாட்டு அரசு மக்களுடன் இருப்பதாக அறிவித்தது. 2 நாட்களில் 20 கி.மீ விட்டத்திற்கு 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்தினார்கள் அவர்கள். மேலும் 2 லட்சம் பேரை வீட்டுக்குள் இருக்க வைத்தார்கள். ஆனால் இங்கு நிலைமை அப்படியா? உண்மை இருக்கிறதா முதலில் நம் அதிகாரிகளிடம்?

சுனாமிக்கு முன் கூடங்குளத்தில் அணு உலை கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளதென தெரிவித்தவர்கள், சுனாமிக்குப் பின் 10 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றும், தற்பொழுது 7 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றும் சொல்வதன் காரணி என்ன? சுனாமியின் போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானிகளும் உயர் அதிகாரிகளும் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சப்பானியக் கப்பல்கள் அணுஉலைகளைக் குளிர்வித்த கதிர்வீச்சு நிறைந்த கடல்நீரை அடி நீராக (பல்லஸ்ட் வாட்டர்) கொணர்ந்து சத்தமின்றி சென்னைத் துறைமுகத்தில் கலந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது. சீனா மற்றும் ஐரோப்பிய துறைமுகங்கள் அபாயச் செய்தி வெளியிட்டு தடுத்தன. கோவா துறைமுகத்தில் அக்கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு?

1948ல் ஏற்படுத்தப்பட்டது இந்திய அணுசக்தி ஆணையம். 1954லிருந்து இயங்குகிறது இந்திய அணுசக்தித் துறை. அணுசக்தியை நெறிப்படுத்தவும் வாரியம் செயல்படுகிறது. ஆனால் இவை நம் மக்கள் நலன்களை இன்று பேணுகின்றனவா? பாதுகாப்பு குறித்த பயத்தைப் போக்குகின்றனவா? பொதுநல வழக்குகள் கூட அணு உலைப் பாதுகாப்பு அணுசக்தி சட்டப்பிரிவு 18ந் கீழ் இரகசியமானது என தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் அணு விபத்து எப்பொழுது ஏற்பட்டாலும் ரூ.2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது என்கிறது. 35 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்தாலும்!

அவர்கள் சொல்லும் உலையையே வாங்கவேண்டும். அதன் பராமரிப்புக்கும் அவர்களையே கூப்பிடவேண்டும். மொத்தத்தில் சப்பானில் விபத்துக்கு காரணமான அணு உலைகளை வழங்கிய அமெரிக்க நிறுவனமான ஜெனெரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு சாதகமாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. அணுசக்தி இழப்பீட்டுத் தொகை மசோதா இயற்கை இடர்ப்பாடுகளால் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்கத் தேவையில்லை என்று கூறுகிறது. சுனாமிக்குப் பிறகு கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய்ப்பரவலும் ஊனமும் அதிகமாகியுள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்த 4 மீனவக் குப்பங்களில் சுனாமிக்குப் பிறகு புற்றுநோய், பிறவி ஊனம், கருக்கலைதல் அதிகமாகியிருப்பதை புதுச்சேரி அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கதிர்வீச்சு காரணமா என்று கண்டறியப்படவேண்டியிருக்கிறது.

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களிடையே மல்டிபில் மயலோமா எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அரசோ அதிகாரிகளோ இன்றுவரை சரியான முறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலிறுக்கவில்லை. மாறாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மருத்துவர் புகழேந்திக்கு சரியான விளக்கங்களைத் தர அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசுக்கு கிண்கிணி அடிக்கும் சில நாளேடுகள் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போராளிகளைக் கொச்சைப்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

அணு உலைகள் இன்றி நம் வாழ்க்கை நகரும். கிரீன்லாந்தில் 100% மாற்று எரிசக்திக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். 2040 க்குள் ஜெர்மனி மொத்த அணு உலைகளையும் மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. இவை ஒரு நல்ல தொடக்கமே. மின் பகிர்வின் இழப்பை ஈடுகட்ட நிலக்கரி மற்றும் நீர் மின் நிலையங்களை அதிக இடங்களில் அமைத்து மின்சாரத்தை சேமிப்பதும் நம்மிடம் பெருமளவில் இருக்கும் இயற்கையின் கொடையான சூரியசக்தியை பயன்படுத்துவதும் மாற்று எரிசக்திகளை ஊக்குவிப்பதுமே நம் இன்றைய தேவையாகும். வல்லரசு கனவில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை விடவும் பாதுகாப்பான மண்ணையும் நீரையும் காற்றையும் நம் வருங்கால இளைய தலைமுறைக்கு விட்டுச்செல்வது நம் ஒவ்வொருவர் மட்டுமல்லாது நம் அரசின் தலையாய கடமையுமாகும்.

நன்றி: சாருமா என்ற சாரதாதேவி From கீற்று.