.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, September 28, 2010

திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்

ஜமாஅத் தலைவர் படுகொலை! பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு!!
திருவிடச்சேரியில் நடந்தது என்ன?

அனைத்து முஸ்லிம்களுக்கும் உயிரினும் மேலான நெறிதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம். உயிரினும் மேலான இந்நெறியை உயிர்களைப் பறிப்பதற்கான போர்வையாக்கினால் அது எவ்வளவு கொடுமை? அதுவும் புனித ரமலான் மாதத்தில் என்றால் எவ்வளவு வேதனை?

அதுவும் இறை இல்லமான பள்ளிவாசலில் என்றால் எவ்வளவு அவலம்?

மார்க்கம் என்பதை மூர்க்கம் என்று புரிந்துக்கொண்ட சில மூளைச் சலவைக்களான கும்பலுக்கும், திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாஅத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மோதலாகி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி பலர் படுகாயம் அடைவதில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தின் சுருக்கம் இதுதான். திருவிடச்சேரி ஜமாஅத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே.) அமைப்பினருக்கும் மோதல் இருந்து ரமலானில் இரவுத் தொழுகையை டி.என்.டி.ஜே. அமைப்பினர் ரோஸ் பாப்பா என்பவரின் வீட்டில் நடத்தி வந்துள்ளனர். ரோஸ் பாப்பா என்பவருக்கும், அவரது எதிர் வீட்டுக்கும் தகராறு இருந¢து வந்துள்ளது. இந்த வாய்த்தகராறில் ரோஸ் பாப்பாக வீட்டிற்குத் தொழுகை நடத்திவந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிலர் இவருக்கு ஆதர வாக இறங்கியுள்ளனர். இந்த பிரச்சினையின் போது ஊர் ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் சமாதானப்படுத்தியுள்ளார்.

தகராறுக்குக் காரணம்:-

ரோஸ் பாப்பா வீட்டில் தொழுகை நடத்தும் அமைப்பினர் இரவு வெகுநேரம் தங்களின் ஆஸ்தான தலைவருமானவரின் சிறப்புப் பேருரைகளையும்,சிலநேரம் குர்ஆனையும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வைத்துள்ளனர். ஜபருல்லாவின் சகோதரியின் குழந்தையும் (இறந்த ஹாஜி முஹம்மதுவின் குழந்தை), சகோ தரரின் ஒரு குழந்தையும் மன நிலை பாதிப்படைந்து சிகிச் சைப் பெற்று வருகின்றனர். மனநலமற்ற குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஒலி பெருக்கியின் சப்தத்தைக் குறைக்கச் சொன்னதும், இஸ்லாத்தைத் தூயவடிவில் பின்பற்றுவதாக நம்புவோருக்கு வெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

5.9.2010 அன்று மாலை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தோரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்திய ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில், ‘‘நோன்பு துறக்கும் நேரமாகிவிட்டது, பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர ஆதரவாளரான குத்புதீனை, தனது உறவுக்காரப் பையன் என்ற உரிமையில் கொஞ்சம் குரலுயர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.

இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பெருந்தன்மையாகப் பிறருக்கு மட்டும் விட்டுக் கொடுத்து விட்டு, இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுகாமல் தங்களது கோபதாபங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். குத்புதீன் தனது மைத்துனரும், திருமங்கலக்குடி பகுதியில் ஆதிகேசவன் போன்ற ஆசாமிகள் துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்பவருமான ஹஜ் முஹம்மது என்பவருக்கு விவரத்தைக் கூறி, ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

கலாட்டா:-

திருமங்கலக்குடியிலிருந்து பல வாகனங்களில் வன்முறைக் கும்பல் வந்துள்ளது. வாகனங்கள் ஊருக்கு வெளியே தப்பியோட வசதியாக நிறுத்தப்பட்டு, ஒரு கார் மட்டும் பள்ளிவாசல் அருகில் வந்துள்ளது. தவ்ஹீத் கொள்கைக்கு உரம் சேர்க்க வருவது போல் அதிரடியாக நுழைந்துள்ளனர். இவர்கள் ததஜ அமைப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும், தீவிர ஆதரவாளர்கள் என்பதும் அப்போது மக்களால் உறுதியுடன் கூறப்படுகிறது. 25 ரவுடிகள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் சென்ற ஹஜ் முஹம்மது, தொழுதுவிட்டு வெளியே வந்த ஊர்த் தலைவர் முகமது இஸ்மாயிலை ஓங்கி முகத்தில் குத்தியுள்ளார். ததஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அதற்கு முன்பாக ஜமாத்தரப்பினர் எந்த முன் ஆயத்தத்திலும் இல்லை என்பதை அவ்வூர் மக்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஜமாத் சார்பில் அடியாட்களோ ஆயுதங்களோ ஏற்பாடு செய்யாமல் சாதாரனமாகவே இருந்திருக்கிறார்கள். ததஜ தரப்பில் சொல்வது போல் ஜமாத் சார்பில் அதிரடி தாக்குதல்கள் நடந்து அதன்பிறகு ததஜ ஆதரவாளரான ஹாஜி முஹம்மது தரப்பினர் தற்காப்புக்காக சுட்டனர் என விளக்கம் அளித்திருப்பதும் மிகப்பெரிய பொய் என்பதை அவ்வூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஜமாத் தலைவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.

அதன் பிறகு தொடர்ந்து வன்முறை கும்பலால் பள்ளி வாசல் ‘நகரா’ கிழிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் உடனே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், வெளியூர் ரவுடிகள் பள்ளிவாசலுக்குள் வந்து தகராறு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஊர்மக்கள் பள்ளிவாசலை நோக்கி வர, இந்த கும்பலில் ஒருவர், ‘‘தலைவரை அடித்ததை மட்டும் மைக்கில் சொல்றியே, இன்னும் நிறைய நடக்கப் போவுது. அதையும் சேர்த்து சொல்’’ என்று கூறியுள்ளார். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளையே ஊர் மக்கள் நம்மிடம் கூறினார்கள். இவர்கள் மிகப்பெரிய திட்டமிடலோடு வந்தனர் என ஊர்மக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதற்கு ஆதாரம் தான் இது என மக்கள் சொல்கிறார்கள். மேலும் துப்பாக்கியுடன் வந்ததில் இருந்தே இவர்கள் தான் வலிய வம்புக்கு வந்ததற்கான ஆதாரணம் என பலரும் கூறுகின்றனர். உடனடியாக ஊர் மக்கள் திரண்டதும் ததஜவுக்காக வந்த ஹாஜி முஹம்மது தலைமையிலான வன்முறை கும்பல் பள்ளிவாசலுக் குள் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து வெளியே வந்து நின்றுகொண்டது. (தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க வசதியாக).

தாக்கிய அந்த நேரத்தில் சராமாரி துப்பாக்கிச் சூடு:-

இந்நிலையில் ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில் மகன் சபீருதீன் (18), ‘‘என் அத்தாவை யாருடா அடிச்சது-?’’ என்று கேட்டு, ரவுடிகள் நின்ற பக்கம் சென்றுள்ளார். மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தில் முகமது இஸ்மாயிலும் சென்று ரவுடிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் குத்புதீனுக்கு ஆதரவாக வந்த அடியாள் படைத் தலைவன் ஹஜ் முஹம்மது, வெறி தலைக்கேறி, முகமது இஸ்மாயிலை சுட்டுக்கொன்றான். அதைத் தடுக்க வந்த ஹாஜி முஹம்மதுவையும் சுட்டுக் கொன்றான். இவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர் தொழுது வந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர். ஜபருல்லாவின் மைத்துனர்.

ஊர் மக்களையும் சரமாரியாக சுட்டப் படி இந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. ஊருக்குள் வந்த காரும், ரவி என்ற ரவுடியும் மக்களிடம் பிடிபட்டனர். வன்முறைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அப்பாவிகள்:-

வன்முறைக் கும்பல் தலைவன் ஹஜி முஹம்மது சுட்டதில் நசீர் முஹம்மது (30), பால்ராஜ் (55) ஹாஜாமைதீன் (45), ராமதாஸ் (45) சந்தியாகு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு துளியும் சம்பந்த மில்லாமல் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இவர்கள் எப் படி இந்த இடத்தில் வந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருவிடைச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்து மற்றும் தலித் மக்களுக்கான பஜார் என்பது திருவிடைச்சேரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ததஜவின் முக்கிய தலைவர் பி.ஜே. கூறியிருப்பது போல் சுடப்பட்ட இந்துக்கள் ரவுடிகளோ, ஜமாத்தாரால் திரட்டி வரப்பட்ட அடியாட்களோ அல்ல. முஸ்லிம் களோடு நேசமாக பழகிய உழைக்கும் அப்பாவிகள். இவர்களுக்கு ததஜ பற்றியும் தெரியாது. ஜமாத்தாரையும் புரியாது என ஊர் மக்கள் கூறினார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் மக்கள் அங்கு குவிந்தனர். தமுமுகவின் அவசர ஊர்திகளில் காயம்பட்டவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச் சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக ஆம்புலன்சும் தொண்டர் களும் உதவியதைப் பார்த்த பத்திரிகை நிருபர்கள் சிலர், தமுமுகவினர் தாக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர்.

தமுமுக நிர்வாகிகளும் அவசர ஊர்திகளும் சம்பவம் நடந்தபிறகு, பாதிக்கப் பட்டோருக்கு மருத்துவ உதவி களைச் செய்வதற்காகவும், மேலும் வன்முறை பரவி விடா மல் தடுப்பதற்குமே அங்கு சென்றுள்ளனர்.

துப்பாக்கி ஏது ?

கொலைக் கும்பல் தலைவன் ஹஜ் முஹம்மது, சிதம்பரத்தில் அந்த இயக்கத்தினரின் துணை யோடு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ஹஜ் முஹம்மது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது மேலும் இரண்டு கள்ள துப்பாக்கிகள் கைப் பற்றப்பட்டன. லண்டனில் தயாரான, 150 ரவுண்டு சுடக் கூடிய துப்பாக்கியும் அதில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இத்த கைய பயங்கர ஆயுதங்களை ஓர் ஆசாமிவைத்திருப்பது போலீசாரை அதிரவைத் துள்ளது.

கொள்கைக்கு பின்னடைவு:-

இந்த பயங்கரவாதிகளின் செயல் திருவிடச்சேரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பது காலத்தின் மிகமிகக் கட்டாயமாகிவிட்ட சூழ் நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத் என உருவெடுத்துவிட்ட இவர்களின் செயல் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்குப் பெரும் சோத னையை உண்டாக்கி விட்டது.

இந்நிலையில் இத்தகைய வன் முறைப் போக்கைக் கண்டிக்க வேண்டிய அதன் தலைமை தற்காப்புக்காகத்தான் ஹஜ் முஹம்மது சுட்டார், திருவிடச்சேரி ஜமாத்தார்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் தாக்க வந்தார்கள், பள்ளிவாசலுக்கு முஸ்லிமல்லாத ரவுடிகளை வைத்திருந்தனர் என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேசி, வன்முறைச் செயலை நியாயப்படுத்தி வருவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் அவ்வூர்மக்கள். நடந்து முடிந்த இந்த அட்டூ ழியம் குறித்து தமிழகம் முழு வதும் உள்ள ஜமஅத்தார்கள், உலமாக்கள் கருத்து கூறுவது என்ன வெனில் சமீப காலமாக ஆளும் திமுகவோடு ததஜவின் தலைமை நெருக்கமாக இருக்கிற காரணத்தால் கொலைக்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை இருக்காது என சந்தேகம் கொள்கின்றனர்.

சிந்திக்க வேண்டும்:-

ஏகத்துவ பிரச்சாரத்தில் கேரள முஜாஹிதீன்களும், அகில இந்திய அளவில் அஹ்லே ஹதீஸ் அமைப் பினரும், தமிழக அள வில் ஜாக், ஐ.பி.பி. உள்ளிட்ட அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்கும் மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் கூட நட்புபாராட்டும் அளவுக்குத் தான் அவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக்கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம் களையும் எதிரிகளாக கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவி தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழகம் முஸ்லிம் சமு தாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கு வானாக. இதைபோல ஜமாஅத்தினரும் தங்கள் தரப்பு தவறுகள் குறித்து கவலையோடு சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால் வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கும் அளவுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வாசிக்கும் ததஜ சகோதரர்கள் யார் மீதும் கோபப்படாமல் நடைபெற்ற கொடூரங்கள் நியாயம் தானா---? என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைவர் ஆறுதல்:-

திருவிடச்சேரியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அறிந்த தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி மற்றும் தஞ்சை (வடக்கு), திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் 7.9.2010 அன்று திருவிடச்சேரிக்குச் சென்றனர். தமுமுக தலைவரின் வருகையை முன்னதாக அறிந்த ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நிர்வாகக்குழுவினர், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவங்களை விளக்கினர். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

பள்ளிவாசலுக்குள் ரவுடிகளை வைத்திருந்தது, தவ்ஹீத் ஜமாஅத் தினரை பயங்கரமாகத் தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த ஊர் ஜமாத்தினர், நோன்புக் காலம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இந்தப் பள்ளிவாசலில் இருந்துதான் கஞ்சி வழங்கியதாகவும், அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக இறங்குவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஹாஜி முஹம்மது ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

திருவிடச்சேரியை ஒட்டியுள்ள விழியூர் சென்று குண்டடிபட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களின் வீடுகளுக்கும் தமுமுக நிர்வாகிகள் சென்று அவர்களுக்கு தமுமுக நிர்வாகிகளின் வருகையை ஒட்டி விழிதியூரில் திரளாகக் கூடிய முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள், திருவிடச்சேரி முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் காலங்காலமாக இருந்துவரும் பாசப் பிணைப்பை நெகிழ்வோடு குறிப்பிட்டனர்.

குடும்பத்தோடு வெளியூர் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி நம்பி ஒப்படைத்துச் செல்வதையும், பலநேரங்களில் முஸ்லிம்களின் கடைகள் மட்டும் சொத்துகளுக்கு பாதுகாப்பாக இம்மக்கள் சென்று இரவெல்லாம் தங்கியிருந்ததையும் தமுமுக தலைவரிடம் கூறிய இம்மக்கள், தங்களை அடியாட்கள் என்று அந்த பேரறிஞர்(?) விமர்சித்தது குறித்து வேதனை அடைந்தனர். நீங்கள் ஜமாத்தினரின் அடியாட்களாகப் போனீர்களா? என்ற கேள்விக்கு வேதனையோடு மறுத்தனர்.

குத்புதீனும் அந்த அமைப்பும்:-

குத்புனுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் எமது உறுப்பினருமில்லை, எமது செயல்பாடுகளில் கலந்துகொள்வதுமில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய தலைவர் பி.ஜே தொலைக்காட்சியில் விளக்கமளித்துள்ளார்.

நாகை மாவட்டம் ஏனங்குடி நடுப்பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள டி.என்.டி.ஜே. அலுவலகம் இந்த குத்புதீன் குடும்பத்துக்குரியது. குத்புதீன் முயற்சியினாலேயே அந்த அமைப்புக்கு அந்த இடம் கிடைத்தது என்கின்றனர் ஊர்வாசிகள். எனவே குத்புதீன், அந்த அமைப்புடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.

திருவிடச்சேரியில் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அஸர் தொழுகை நேரம். அப்போது குத்புதீன் அங்கே இருந்ததால் பிரச்சினை வளர்ந்துள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக அந்த வீட்டில்தான் இரவுத் தொழுகைக்கும் வந்துள்ளார்.

இவர் தற்செயலாக நண்பரோடு வந்ததுபோல் அதன் தலைமை கூறியதும் பொய்யே.

வன்முறை இவர்களது வழிமுறை இல்லையென்றால், திருவிடச்சேரி ஜமாஅத் தலைவரும், இன்னொரு முஸ்லிமும் கொல்லப்பட்டதை இந்த நிமிடம் வரை அவர் ஒப்புக்குகூட கண்டிக்காமல் இருப்பது ஏன்?

தற்காப்புக்காக சுட்டாரா?

பள்ளிவாசலுக்கு நியாயம் கேட்க வந்த ஹஜ் முஹம்மது, தற்காப்புக்காக சுட்டதில் இருவர் பலியாகிவிட்டதாக அந்த தலைவர் கூறுகிறார்.

நியாயம் பேச வருபவர் துப்பாக்கியோடு தான் வருவாரா?

பள்ளிவாசலுக்கு துப்பாக்கி எடுத்து வருவது அவசியமா?

நபிவழியில் நடப்பதற்காக, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள் துப்பாக்கி மூலம்தான் தீர்வு கண்டார்களா?

இதற்கெல்லாம் என்ன பதில்-?

திருவிடச்சேரி மக்கள் கருத்து

முகம்மத் இக்பால் (ஜமாத் பொருளாளர்) கூறுகையில்:-

இந்த ஊரில் நாங்கள் எல்லாம் ஒத்துமையா வாழ வேண்டுமென நினைப்போம். ஆன இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் நடந்த நாளில் தவ்ஹீத் ஜமாதினர் இவ்வூரில் ஒரு வீட்டில் ரமலான் இரவு தொழுகை நடத்தி வந்தனர். அப்போது அவ்வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டுகாரர் களுக்கும் நடந்த சிறிய பிரச்சணைக் காரணமாக கைகலப்பு நடந்தது. இதனை ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலையிட்டு சுமார் 50 அல்லது 60 பேர்களுடன் மீண்டும் வந்தனர். அப்போது ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

பிரச்சனையைப் பேச 10 பேர் வந்தா போதுமே ஏன் இத்தனை பேர் என ஜமாத் தலைவர் கேட்டார். அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினர் ‘‘இவர்கள் எங்கள் பக்கம் பேச வந்துள்ளனர்’’ என்று கூறினர். யாரும் எதிர்பார்’காத நேரத்தில் இஸ்மாயில் அவர்களை அவர்களில் ஒருவரான ஹாஜி முகம்மது மூக்கில் தாக்கினார். இதனால் ஜமாத் தலைவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பள்ளி இமாம் மைக்கில், ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு செய்தார். அறிவிப்பு செய்யும் போதே கொலையாளிகள் ‘‘இப்போது மூக்கை மட்டும் தான் உடைத்துள்ளோம் இன்னும் பாக்கி உள்ளது அதையும் மைக்கில் சொல் லுங்கள்’’ என கூறினர். இமாமின் அறிவிப்பை கேட்ட உடன் ஜமாத் தலைவரின் மகன் ஒடி வந்து ‘‘யாருடா என் அத்தாவை அடித்தது தைரியம் இருந்த இப்ப வா’’ என ஆவேசப்பட்டார். மகன் கோபத்தில் ஏதாவது செய்திடுவானோ என பயந்து அவனை சமாதானப்படுத்த பள்ளியிலிருந்து ஜமாத் தலைவர் இறங்கினார். ஒரு சில அடிகள் சென்ற உடன் இவ்வூரைச் சேர்ந்த குத்புதீனின் மச்சானாகிய ஹஜ் முகம்மது அவரை சுட்டான்.

இதுக்கு அரசியல் கட்சிகள் காரணம் என சொல்கிறார்கள் இதற்கு அதிமுகவோ திமுகவோ காரணம் இல்ல. இதற்கு குத்புதீன் தான் காரணம்.

சமா தானப்படுத்தினார். ஆனால் ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த அவர்கள் அங்கிருந்து சென்று அவர்தான் சம்பவம் நடக்க இருந்த சில மணிநேரத்துக்கு முன் ‘‘இன்னும் 2 மணிநேரத்தில் இந்த ஊரை என்ன பண்றேன் பார்’’ என சொன்னார்.

ஹாஜா மைதீன் (ஜமாத் துணைத் தலைவர்) கூறுகையில்:-

இஸ்மாயில் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் நாள் வரை எல்லாரிடமும் நல்ல முறையில் நடந்துக்கொண்டார்.

இந்த பசங்க இப்படி பண்ணுறானுங்களே என்று ரொம்ப கவலைப்பட்டார். பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் இதே கவலையில் இருந்தார். எப்பவுமே நாம் அனைவரும் ஒன்றுதானே ஏன் பிரச்சனை பண்றாங்க என்று கூறி வருத்தப்படுவார். அப்படிப்பட்ட ஒருவரை எங்க ஜமாத் இப்போது இழந்துவிட்டது. சம்பவம் நடந்த நாளில் அவர்கள் 5 கார்களில் வந்து ஏற்கனவே திட்டமிட்டது போல் சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்தி ஒரே ஒரு குவாலிஸ் காரிலே மட்டும் வந்தார்கள் எல்லாம் முடிந்தவுடன் அந்த கார்களில் தப்பிவிட்டனர். இது எல்லாமே முன் ஏற்பாட்டுடன் நடந்துள்ளது போல் தெரிகிறது, இதற்கு காரணமானவர்களை காவல்துறை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சுட்டுக்கொள்ளப்பட்ட ஜமாத் தலைவரின் மகன் சபீருதீன் கூறுகையில்:-

நான் பிரச்சனை என்று கேள்விப் பட்டு போனேன். அவங்க 50 பேருக்கு மேல் இருந்தாங்க அத்தாவை அடிச்சதுல மூக்குல ரத்தம் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டாங்க. அங்கேயே அத்தா மவுத் தாயிட்டார்.

ஜபருல்லா (சுட்டு கொல்லப்பட்ட ஹாஜி முஹம்மதின் மைத்துனர்) கூறுகையில்:-

எங்களுக்கும் அவர்களும் தனிப் பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ஜமாத்திற்கும் அவர்களுக்கும் சிறு சிறு பிரச்சணை வரும், பிறகு சரியாகிவிடும்.

என்னுடைய சகோதர மகனுக்கு சிறிது மூளை வளர்ச்சி குறைவு. அவனுக்கு அதிக சப்தம் ஒத்துக்காது. அவர்கள் எதிர் வீட்டில் ஸ்பிக்கர் போட்டு ரமலான் இரவு தொழுகை நடத்திவந்தனர். குர்ஆன் தொழுகை காரணமாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சம்பவ தினத்தில் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் பெண் எங்கள் குடும்பத்தினரை தவறாகப் பேசி னார். இதனை பெரிது பண்ண வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ரமலான் வரை தொழுகை நடக்கட்டும், பிறகு நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டோம். இதையே ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்களும் கூறினார். பிறகு நோன்பு துறந்த பின் குத்புதீன் என்பவர் சமாதா னம் செய்த ஜமாத் தலைரை தரக் குறைவாகப் பேசினார். இதனை அங்கிருந்த மக்கள் ஆட்சேபனை செய்தனர். அவர்களையும் தரக்குறை கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து பொதுமக்களை தாக்கினர். இதில் மாற்று மத சகோதரர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையில் குத்புதீன்என்பவர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த தெருவையே தரைமட்டம் ஆக்குரென் பாரு என போனார்.

இதே போல் அடிக்கடி குத்புதீன் சொல்வது வழக்கம். எனவே இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில மணி நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து மைக்கில் ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் பள்ளிவாசலை நோக்கி ஓடினோம். கண் மூடி திறக்கும் முன் ஹஜ் முகம்மது என்பவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜமாத்

தலைவர், எனது மச்சான் ஹாஜி முஹம்மது ஆகியோர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் மாற்று மத சகோதரரும் அடங்குவர். ஒரு சிறிய விஷயத்தை பெரிய பூதாகரமாக்கி உயிர்பலி வாங்கிவிட்டனர். நானும் தவ்ஹித் சிந்தனை உள்ளவன்தான். ஜமாத் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் நாம் ஏகத்துவ கொள்கையைச் சொல்ல முடியும் என சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

எதிர்தரப்பில் அவர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கொள்கை ரீதியாக செயல்படுவதில்லை.

பிச்சை முஹம்மது (சம்பவத்தை நேரில் கண்டவர்):-

சம்பவ நாளில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஜமாத் தலைவரை ஹஜ் முகம்மது என்பவர் முகத்தில் அடித்தார். பின்பு ஜமாத் தலைவரை நோக்கி ‘‘நீ என்ன பெரிய ஆளா?’’ என கேட்டு அவரது நெஞ்சில் குத்தினார். தலைவரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ஜமாத்தினர் அவர்களை பிடிக்கும் போது அவர்கள் பள்ளியிலிருந்து கீழே இறங்கி விட்டனர்; அதன்பின்பு ஜமாத் தலைவரையும் அவருடன் இருந்தவர்களையும் சரமாரியாக சுட்டு, தயாராக இருந்த கார் களில் தப்பினர். சம்பவத்தை கேள்விப் பட்டவுடன்; தமுமுகவினர் 150க்கு மேற்பட்டோர் வந்து எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

குண்டுபாய்ந்த இந்துமத சகோதரர் ராமதாஸ் மனைவி கூறுகையில்:-

என் கணவர் மாதா கோயில் திருவிழாக்காக வசூல் செய்ய அங்கு சென்றார். அங்கு நடந்த பிரச்சனையில் அவருடைய விலாவிலும் குண்டு பாய்ந்து தற்போது தஞ்சை மருத்துவமனை ஐ.சி.யு.வில் உள்ளார். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கணவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார்.

அவரும் இப்போது மருத்துவமனையில் உள்ளதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

சின்னப்பா (சம்பவத்தை நேரில் கண்டவர்) கூறுகையில்:-

‘‘எங்க விழிதியூர் கிராமத்திலிருந்து நாங்க எல்லோரும் கடைக்கு இங்கு தான் வருவோம். எங்களுக்கு முக்கியமான கடைத் தெருவே இந்த ஊர்தான்.

எங்களுக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் எந்தப் பிரச்சணையும் இல்லை. கடைக்கு வந்த நாங்கள் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு ஒடினோம்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்க ஊர்’காரருங்க 3 பேர் சிக்கிட்டாங்க. அவங்க இப்போ ஆஸ்பத்திரில இருக்காங்க’’.

அந்தோனி சாமி (குண்டு பாய்ந்தவரின் உறவினர்) கூறுகையில்:-

‘‘விழிதியூர் கிராமத்திலே இதுக்கு முன்னாடி இதுபோல் நடக்கவே இல்ல. இது பெரிய அநியாயம். நாங்க மாதா கோயில் திருவிழா நடத்த வசூல் செய்யப் போனோம். ஆனால் திருவிழா நடத்த வேண்டிய நாட்டாமை இருவரும் இப்போ மருத்துவமனையில் உள்ளனர்’’.
நன்றி: மதஜ

இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக? ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

மறைகளண்ட தக்லீதுகளின் உலறல்கள்.
இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக?
ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட மோதலில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே அதற்கு யார் காரணம் என்பதும் சமுதாயம் அறிந்துள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் உள்ளார். திருவிடைச்சேரியில் என்ன நடந்தது என்று சமுதாய மக்கள் அனைவரும் அறிவர். இந் நிலையில் இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திருகிறதா தமுமுக என்று ஷேக் தாவூத் என்ற மனநோயளி தனது வலைபூவில் பிதற்றியிருக்கிறார்.

திருவிடைச் சேரியில் நடந்தது என்ன என்று ஏற்கனவே தெளிவாக எழுதிவிட்ட நிலையில் மீண்டும் எழுதி நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை.

திருவிடைச்சேரியில் நடந்தது என்னவென்று அந்த ஊர் ஜமாத்தார்கள் எழுதி உள்ள கடிதம்:



இனியாவது நடுநிலையோடு சிந்திக்க முன்வரட்டும்.


நடந்த சம்பவங்களின் விபரத்திற்கு:
“The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

தட் ஈஸ் தமிள், தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html

http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml

http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

ஊழல்... தேச அவமானம்



தாய்க்கு வாங்கும் சேலையிலும்
பிள்ளைகளின் பணம்பதுக்கல்
தரமற்ற ஆடை கிழிந்ததால்
ஊரார் நகைத்து
கைகொட்டி சிரிக்க
வீதியில் நிலைகுலைந்து
தன் மானம்மறைக்க
இயலாமல் திண்டாடுகிறாள்
பெற்ற தாய்....
நன்றி -செய்யதலி

Monday, September 27, 2010

இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்

(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் -ஆசிரியர்)



அயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.

கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன.

கோல்வால்கரின் பாசிச கருத்துகள்

பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.

ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'

இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.

நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.

'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.

'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.'

பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.

ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?

அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.

வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:

'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'

இது மட்டுமா?

டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.

பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)

பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?

திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா?

பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா? மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள்.

இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்!

Thursday, September 23, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.

இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!

1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.

1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.

தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, September 20, 2010

பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!

சமுதாயச் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளியின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 24ம் தேதி அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்படஉள்ளது...

தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.

இழந்த உரிமையை பெற்றுள்‍ளோம்...

வழங்கப்படும் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நீதி கேட்டு உச்சநீதி மன்றம் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே! தேசத்தின் நலன் கருதி பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திட வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, September 16, 2010

போலீஸ் ட்ரீட்மென்ட் பிளஸ் என்கவுன்டர்

அலறும் அவஸ்தைக் குடும்பங்கள்!

மிச்சம் இருக்கும் எங்களை நிம்மதியா இருக்கவிடக்கூடாதா?

நன்றி: ஜூவி

போலீஸ் ட்ரீட்மென்ட்' என்ற வார்த்தை பல சந்தர்ப்பங்களில் நடுக்கத்தோடு உச்சரிக்கப்படும். விதம் விதமான காக்கி சித்ரவதைகளை அனுபவித்தவர்கள் ஒரே இடத்தில் கூடி அதை வாக்குமூலமாகச் சொன்னார்கள். கேட்கும்போதே நெஞ்சு நடுங்கிவிட்டது.

மதுரை ஹென்றி டிஃபேனின் 'மக்கள் கண்காணிப் பகம்' அமைப்பு, சென்னையில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்கள் மற்றும் காவல் நிலைய விசாரணை களின்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போலீஸ் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் கலந்துரை யாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் மதுரை அருளானந்தம் பேசினார்...

''என் மச்சினன் முருகன் மீது சில வழக்குகள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம், அவனைப் பிடித்துத் தரும்படி சொல்லி என்னையும், என் மனைவி தனலட்சுமியையும் போலீஸ் நிலையம் கொண்டுபோய் டார்ச்சர் தந்தனர். ஸ்டேஷன்ல வெச்சு, பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க. நாங்க ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சு, போலீஸ்கிட்ட முருகனே பேசினான். அப்போ, 'நான் என்ன தப்பு செஞ்சேன்? எதற்காகத் தேடுறீங்க, ஏன் அவங்களை கஸ்டடியில வெச்சிருக்கீங்க?'ன்னு முருகன் கேட்டிருக்கான். போலீஸ்காரங்க, 'உன்கிட்ட சின்ன விசாரணை இருக்கு. வந்துட்டுப் போ'ன்னு கூப்பிட... அடுத்த நாள் முருகன் வந்ததும்தான், எங்களை அனுப்பினாங்க.

அடுத்த ரெண்டு நாள் அவனை அடிச்சு, உதைச்சு, சித்ரவதை செஞ்சாங்க. அவன் சுய நினைவை இழந்துட்டான்.

திடீர்ன்னு ஒரு நாள் மதுரை தெப்பக்குளத்துக்குக் கொண்டுபோய் முருகனையும் கவியரசுவையும், என்கவுன்ட்டர்னு சொல்லி சுட்டுட்டாங்க. என் மாமியார் (முருகனின் அம்மா) குருவம்மா, 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்புல இதுபத்தி புகார் கொடுத்தாங்க. அவங்க இந்த உண்மையை சொல்ல ஒரு பிரஸ்மீட் வெச்சாங்க. இந்தத் தகவல் அப்படியே பத்திரிகைகளுக்குப் போனதால், போலீஸ§க்குக் கோபம். திரும்பவும் போலீஸ் டார்ச்சர்... மனைவி தனலட்சுமியை தங்கத் தோடு திருடியதா அரெஸ்ட் பண்ணி, ஜெயில்ல போட்டாங்க. என் மாமியாரை, 'நீ உடனடியா மதுரையைவிட்டு வெளியே போ'ன்னு தொந்தரவு பண்றாங்க. முருகனைத்தான் கேட்பார் இல்லாம கொன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு மிச்சம் இருக்கிற எங்களையும் நிம்மதியா விட மாட்டேங்கிறாங்களே!''

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி கமலா: ''அவங்களை என்கவுன்ட்டரில் கொல்லப்போறதா தகவல் கிடைச்சதும் நாங்க கர்நாடக மாநிலம் பெல்லாரி பக்கம் தலைமறைவு ஆயிட்டோம். ஆனா, எப்படியோ விஷயம் தெரிஞ்சு, தமிழக போலீஸ் அங்கே வந்தது. அங்கே இருந்து தப்பி ஹோஸ்பெட் போனோம். நானும் கணவரும் செல்போனில் பேசியதை வெச்சு டிரேஸ் செய்து போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சிடுச்சு. ஜூலை 31-ம் தேதி வரை அவங்க கர்நாடகாவில்தான் இருந்தாங்க. ஆனா, அடுத்த நாள் காலையில தமிழ்நாட்டில் அவங்களை சுட்டுக் கொன்னதாத் தகவல் வந்தது.

இதன் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கு. அவர் வற்புறுத்தலால்தான் பெரிய போலீஸ் அதிகாரியே நேரில் வந்து இந்த என்கவுன்ட்டரை பண்ணினாரு. இது தொடர்பா கேஸ் போட்டிருக்கோம். நாங்க நிச்சயம் ஜெயிப்போம்!''

செங்கோட்டையைச் சேர்ந்த அய்யப்பன்: ''மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும், உரிமையைப் பெற்றுத்தர நான் போராடுவதால், உள்ளூர் போலீஸ§க்கு என் மீது கோபம். கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி என்னைக் கைது செய்து, இரவு 11 மணி முதல் 3 மணி வரை அடித்து உதைச்சாங்க. அப்புறம், செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினாங்க. அதுக்கு முன்னாடி அரசு டாக்டர் ஒருத்தர்கிட்ட என்னைக் காட்டி, நல்லா இருக்கிறதா சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டாங்க. ஆனால், நான் மாஜிஸ்திரேட்கிட்ட நடந்ததைச் சொல்லி, காயங்களைக் காட்டினேன். போலீஸ் அந்த போலி சர்ட்டிஃபிகேட்டை மாஜிஸ்திரேட்கிட்ட கொடுக்க... அவர் ஏற்க மறுத்து, அந்த டாக்டர் உடனடியாக ஆஜராகணும்னு உத்தரவிட்டார். டாக்டரிடம், 'போலீஸ் என்ன சொன்னாலும் அப்படியே செய்வீங்களா?'ன்னு கேட்டுத் திட்டினார். பின்னர் எனக்கு மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்டார். அதுக்கப்புறம் ஜாமீனில் வந்தேன்.

ஆனாலும் தொடர்ந்து போலீஸ் டார்ச்சர். பயந்து சொந்த ஊருக்கே போகவில்லை. என் குழந்தை என்னைப் பார்க்கணும்னு அழுவதாக மனைவி செல்போனில் சொன்னார். 'போய்ப் பார்க்கலாமே' என்று போனேன். வீட்டுக்குப் போன அஞ்சாவது நிமிஷத்திலேயே போலீஸ் வந்து, கைது செஞ்சது. இப்போ, வெளியில் வந்த பிறகும் தொடர்ந்து டார்ச்சர்தான்...''

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சித்ரவதை அனுபவங்களைச் சொல்லி முடிக்க, ஹென்றி டிஃபேனிடம் பேசினோம், ''தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் 25 போலி என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் 46 நடந்திருக்கு. இப்படி பலவித சித்ரவதைகள் தமிழ்நாட்டில் நடந்துட்டு இருக்கு. இதைத் தடுப்பதற்கு முறையான சட்டம் வேண்டும்!'' என்றார் அவர்!

- பா.பிரவீன்குமார்
படங்கள்: வி.செந்தில்குமார்

Thursday, September 9, 2010

Eid Mubarak - ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, September 7, 2010

திருவிடச்சேரியில் வன்முறை வெறியாட்டம்: தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

“திருவாருர் மாவட்டம், திருவிடச்சேரியில் 05.09.2010 அன்று சமூக விரோதிகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

சமூக விரோதிகள் திருவிடச்சேரி ஜமாத் தலைவரையும் அவரது மைத்துனரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதும், முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் படுகாயப்படுத்தி இருப்பதும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரத்தை அணுவளவும் சகிக்க முடியாது.

வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், வெளியூரிலிருந்து வந்த அடியாட்கள் மீதும், வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமுமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறது.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.